உடல் எடையை குறைக்க முயன்ற 7 பிரித்தானியர்களுக்கு நேர்ந்த கதி
25 Mar,2023
துருக்கி நாட்டில் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஏழு பிரித்தானிய பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் மிக மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கின்றனர்.
அறுவைச் சிகிச்சையின்போது 70 சதவீதமானவர்களுக்கு வயிற்றுப் பகுதி அகற்றப்படுகிறது.
மிகக் கடுமையான உடல் பருமன் பிரச்சினையைக் கொண்டவர்களுக்குப் பிரித்தானியாவில் அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், அங்குள்ள மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்பதால் சிலர் குறுக்கு வழியாக வெளிநாடுகளில் அதனை மேற்கொள்கின்றனர்.
சமீப காலங்களில் மக்கள் மத்தியில் பரவும் இவ்வாறான பல சமூக வலைத்தள விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
இதற்கிடையே, துருக்கியில் அறுவைச் சிகிச்சை செய்து மோசமான பக்கவிளைவுகளுடன் பிரித்தானியாவுக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை எத்தனை பிரித்தானிய மக்கள் அந்த அறுவைச் சிகிச்சைக்காக துருக்கி சென்றனர் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்ற நிலையில் அவ்வாறு செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் 2019 இல் இருந்து இதுவரை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.