உதவித்தொகை பெறுவதில் புதிய கட்டுப்பாடு! - வெளிநாடுகளில் வசிப்போருக்கு சிக்கல்!!
09 Mar,2023
பிரான்சில் உதவித்தொகை பெற்றுக்கொள்பவர்கள் மீது மிக இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநலக் கொடுப்பனவுகள் (les allocations familiales) பெற்றுக்கொள்வதில் இடம்பெறும் பல்வேறு மோசடிகளை தடுக்கும் முகமாக பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதாந்தம் சமூகநல கொடுப்பனவு பெறும் நபர் ஒருவர் குறைந்தது ஆறு மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் எனும் தற்போதைய விதியை விரைவில் 9 மாதங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிதி மற்றும் கணக்குகளுக்கான அமைச்சர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முதியோர் கொடுப்பனவுகள் பெறுபவர்கள், குடும்பங்களுக்கான உதவித்தொகை பெறுபவர்கள் குறைந்தது ஆறு மாதங்கள் நாட்டில் வசித்திருக்க வேண்டும் எனவும், APL ஊக்கத்தொகை பெறுபவர்கள் 8 மாதங்கள் நாட்டில் தங்கியிருக்கவேண்டும் எனவும், அதேபோது மேலதிக கொடுப்பனவுகளை பெறும் ஒருவர் குறைந்தது 9 மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் எனவும் Gabriel Attal தெரிவித்தார்.
அதேவேளை, கொடுப்பனவு பெறும் ஒருவர் வெளிநாடுகள் வசிக்கின்றாரா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படும் எனவும், அவர் நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில் அவருக்கான கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூகநலக்கொடுப்பனவுகளை, ஐரோப்பிய வங்கிகள் தவிர்ந்த ஏனைய வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது எனும் புதிய சட்டமும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த சட்டமானது வரும் ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.