புதுமண தம்பதிக்கு 30 நாள் சம்பளத்துடன் விடுமுறை.. குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த சீனா திட்டம்!
24 Feb,2023
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்கி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி கணிசமாக சரிவை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் சீனாவை தற்போது பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததாக சில சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1980இல் சீனா அரசு ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றியதால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கட்டுபாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015க்குப்பின் கொண்டுவரத் தொடங்கியது.
அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2021ஆம் ஆண்டில் சட்ட விதியை மாற்றி அமைத்தது. இந்நிலையில், சீனாவின் பல்வேறு மாகாணங்கள் திருமண விடுப்பு சார்ந்த விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளனர். முன்னதாக திருமணத்திற்கு 3 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை அளித்து வந்தன. இதை தற்போது சில மாகாணங்கள் 30 நாள்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளன.
மக்கள்தொகை எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. கன்சு, ஷான்சி போன்ற மாகாணங்கள் இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளன. ஷாங்காய் மாகாணம் 10 நாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்க முடிவெடுத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்தாண்டு சீனாவில் மக்கள்தொகை சரிவு கண்டது. இதனால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற பல திட்டங்களை சீனா தொடர்ந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.