20 வயதிலிருந்து தற்போதுவரை தூங்காமலே வாழும் அதிசய மனிதர்
17 Feb,2023
ஒரு முதியவர் சுமார் 60 ஆண்டுக்காலமாக தூக்கமே இல்லாமல் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதாஸ
வியட்னாமைச் சேர்ந்த 80 வயது முதியவரொருவர், தன்னுடைய 20 வயதிலிருந்து தற்போதுவரை தூங்காமலே இருக்கிறார்.
அவரின் பெயர் தாய் என்கோக் (Thai Ngoc).
தற்போது 80 வயதாக இருக்கும் இந்த தாய் என்கோக்குக்கு, 1962இல் 20 வயதாக இருந்தபோது ஒருவித காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமுதல் தன்னுடைய தூக்கத்தைத் தொலைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
அதற்கான காரணம் என்னவென்றும் இதுவரை தெரியவில்லை.
இன்சோம்னியா நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தாலும், அவருக்கு உடலளவிலோ, மனதளவிலோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்களே கூறுகின்றனர்.
அதேசமயம் தாய் என்கோக் நல்ல உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்.
ஆனால், அவரும் தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலவே தூங்க விரும்புகிறார்.
இவர் குறித்து வெளியான தகவலின்படி, அவரின் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என யாருமே அவர் தூங்கிக் கண்டதில்லையாம்.
மேலும், இவரைப் பற்றிய வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையதளவாசி ஒருவர், “அவர் இன்னும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த பூமியில் வாழ்ந்தவர்களில் அதிக நேரத்தைப் பெற்றவர் இந்த மனிதனே” என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.