130 ஆண்டுகள் சிறை தண்டனை கைதிக்கு 20 ஆண்டுகள் கடந்து கிடைத்த நீதி..
25 Jan,2023
அமெரிக்காவின் புதிய சிறைவிதி கொள்கை மாற்றத்தால் 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய நபரின் கோரிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் அவர் நிரபராதி என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு பின்பு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவந்தையடுத்து குற்றம் சுமத்தப்பட்ட நபர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவின் சுற்றுலாத் தீவு மாகாணமான ஹவாயில் வெளிநாட்டைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய அயர்லாந்து பெண் ஒருவர் உடலில் வாகனம் மோதிய காயங்களுடன் இறந்து கிடந்தார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை பலரது கண்டனத்திற்கும் உள்ளானது. அப்போதைய பரபரப்பான தலைப்புச் செய்தியாகவும் இந்த சம்பவம் இருந்தது. குற்றவாளியை கண்டறிவதில் காவல்துறை தீவிரம் காட்டியது.
இதையடுத்து அதே மாகாணத்தைச் சேர்ந்த 51 வயது நபரான ஸ்ச்வெய்ட்டர் என்பவர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தது. மேலும் ஸ்ச்வெய்ட்டருக்கு அதிரடியாக 130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக ஸ்ச்வெய்ட்டர், அரிசோணா சிறையில் இருந்து வந்தார். அண்மையில் அமெரிக்காவில் சிறை நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களின் கோரிக்கைகளை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யும். இந்த சலுகையின் படி தான் ஸ்ச்வெய்ட்டர் நீதிமன்றத்திற்கு தனது வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரிக்கையை விடுத்தார்.
இந்த வழக்கை ஹோனோலுலு நகர நீதிமன்றத்தில் நீதிபதி பீட்டர் குபோட்டோ விசாரித்தார். இதையடுத்து கொலையான பெண் அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு டி-சர்ட்டில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ரத்தக்கறை இருந்ததாகவும், அதை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. சோதனை முடிவில் அந்த டி-சர்ட் ஸ்ச்வெய்ட்டருக்கோ குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்குமோ சொந்தமானதில்லை என்றும், வேறொருவருக்கு சொந்தமானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஸ்ச்வெய்ட்டர் பயன்படுத்திய ஃபோக்ஸ் வேகன் பீட்லே காரின் டயர் தடங்கள் சம்பவத்திற்கு தொடர்பான இடம் எதிலும் இல்லை என்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ச்வெய்ட்டரை நிரபராதி என தீர்ப்பளித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
இதற்காக அரிசோணா மாகாண சிறையில் இருந்து ஹவாய் தீவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார் ஸ்ச்வெய்ட்டர். தன் வழக்கின் வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட ஸ்ச்வெய்ட்டர், தான் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடன் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.
தன்னைப் போலவே குற்றம் செய்யாமலேயே சிறையில் நிறைய பேர் வாடுவதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தற்போது இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் உண்மையான குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது.