20 வருஷமாக டாக்டர் என பெண். ரூ.8.16 கோடி வருமானம் ஈட்டிய போலி டாக்டர்!
17 Jan,2023
நம்மை சுற்றியுள்ள சமூகத்தில் போலி ஆசிரியர், போலி பொறியாளர், போலி பத்திரிகையாளர் என்று பல தரப்பினர் உண்டு என்றாலும் போலி மருத்துவர் குறித்த செய்திதான் நமக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும். காரணம், இது உடல்நலன் மற்றும் மனநலன் தொடர்புடையதாக இருப்பதுதான். இந்தியாவில் அவ்வபோது போலி மருத்துவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் சார்பில் ரெய்டு நடத்தப்படுவதும், அந்த சமயத்தில் பலர் பிடிபடுவதும் செய்திகளில் நாம் பார்க்கின்ற விஷயம் தான்.
இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் கூட இதே பிரச்சினை நீடிக்கிறது. குறிப்பாக, உலகையே கட்டி ஆண்ட பிரிட்டனிலும் கூட போலி மருத்துவர்களுக்கு குறைவில்லை. அங்குள்ள பெண் ஒருவர், போலியான சான்றிதழ்களைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக மனநல மருத்துவர் எனக் கூறி மக்களை ஏமாற்றி வந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 20 வருட காலத்தில் அவர் ரூ.8.16 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலி மருத்துவருக்கு எதிராக மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்ணின் பெயர் ஸோலியா ஆலெமி ஆகும். இவர் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றதாக கூறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். 60 வயதாகும் இந்தப் பெண்ணின் மீது 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் ஸ்டேபிள்ஸ் கூறுகையில், “அப்பட்டமாக கூறுவதென்றால் எதிர்மனுதாரர் ஒரு மோசடியாளர் ஆவார். மருத்துவர் என்று அவர் தன்னைத் தானே கூறிக் கொண்டாலும், அவர் தகுதி பெறவில்லை என்பதுதான் உண்மை. போலியான பட்டச் சான்றிதழ் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டதாக கூறி போலியான உறுதியளிப்பு சான்றிதழ் ஆகியவற்றை பிரிட்டனில் உள்ள பொது மெடிக்கல் கவுன்சிலில் அவர் 1995ஆம் ஆண்டில் சமர்ப்பித்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.
மருத்துவக் கல்வி தேர்வில் ஸோலியா ஆலெமி தேர்ச்சி பெறாமலேயே பட்டம் மற்றும் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார் எனத் தெரிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரிட்டன் மருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி அடைந்தததைத் தொடர்ந்து, அவர் மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
6 ஆண்டுகள் இளநிலை மருத்துவக் கல்வி பயின்ற ஒருவர் தான் பிரிட்டனில் மருத்துவர் ஆக முடியுமாம். ஆனால், இந்த பெண் மருத்துவக் கல்வியின் முதலாம் நிலையில் தேர்ச்சி பெற்ற நிலையில், இரண்டாம் நிலையிலேயே தோல்வி அடைந்துள்ளார். இவர் கடந்த 1962ஆம் ஆண்டில் ஈரானின் டெஹ்ரான் நகரில் பிறந்தவர் என்றும், 1987ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அதற்குப் பிறகு பிரிட்டனில் குடியேறியிருக்கிறார் என்றும் பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.