அமெரிக்காவில் செவ்வாய் கிரகத்திற்கு இணையான கடுங்குளிர் நிலவுவதால் மக்கள் திணறல்!
25 Dec,2022
பொதுமக்கள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிபர் பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை தாக்கியுள்ள பாம் சூறாவளியால் அங்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு இணையான கடுங்குளிர் நிலவுவதால் மக்கள் திணறி வருகின்றனர்.
அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இது மேலும் குறைந்து மைனஸ் 60 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான பனிப்புயலால் விமான நிலையங்கள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் கார்களில் தங்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருகின்றனர். இப்படி சுமார் 10 கோடி பேர் கார்களில் தங்கள் சொந்த ஊர் திரும்பலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குளிர் மிக மோசமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிபர் பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.