ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இன்று அமல்
05 Dec,2022
ரஷ்ய எண்ணெயின் கடல்வழி இறக்குமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகள் இன்று முதல் நடப்புக்கு வருகின்றன.
மேலும் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர் விலை வரம்பும் இன்று முதல் நடப்புக்கு வருகின்றது. அந்த விலை வரம்புக்கு ஐரோப்பிய ஒன்றியம், G7 தொழில்வள நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவை இணக்கம் தெரிவித்துள்ளன.
உக்ரேன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யாவைத் தண்டிக்க அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் உலகப் பொருளியலுக்கு மேலும் நெருக்குதல் அளிக்காத வகையில் அவை அமைந்துள்ளன.
ரஷ்ய எண்ணெய் தொடர்பான விநியோகம், காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் விலை வரம்பைச் செயல்படுத்த வேண்டும்.
அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பாவில் உள்ளன. அந்தத் தடைகளை ரஷ்யா கண்டித்துள்ளது. ஆனால் அவை இன்னும் கடுமையாக்கப்படலாம் என்று உக்ரேன் கூறுகிறது.
மேற்கத்திய நாடுகள் நிர்ணயிக்கும் எந்த விலை வரம்புக்கும் கட்டுப்படப்போவதில்லை என்று ரஷ்யா கூறிற்று. அதற்குப் பதிலடி கொடுக்கவும் மாஸ்கோ (Moscow) சூளுரைத்திருக்கிறது.