சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கவும் அந்த மரணம் குறித்து விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராம்குமாரின் மரணம் குறித்து தானாக முன்வந்து விசாரித்துவந்த மாநில மனித உரிமை ஆணையம் இன்று தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக அளிக்கவும் ராம்குமார் சிறையில் உண்மையிலேயே மின்சார வயரைக் கடித்துதான் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டும் ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை ஜூலை ஒன்றாம் தேதியன்று காவல்துறை கைதுசெய்தது.
இந்த விவகாரத்தில் காவல்துறை சரியாக நடக்கவில்லை என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென்றும் ராம்குமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், செப்டம்பர் 18ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. சிறையில் இருந்த மின்சார வயரைக் கடித்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தை செய்தித் தாள்களில் வந்த செய்தியின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம். மேலும், இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் வழக்கறிஞர் ஒருவர் புகார் அனுப்பியிருந்தார். அந்தப் புகாரில் காவல்துறை சொல்வதைப் பால ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இந்தப் புகாரை மாநில மனித உரிமை ஆணையம் தொடர்ந்து விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சாட்சியமளித்த புழல் சிறையின் கண்காணிப்பாளர், தண்ணீர் குடிக்க வேண்டுமென்று வந்த ராம்குமார் திடீரென அருகில் இருந்த ஸ்விட் போர்டை உடைத்து அதில் இருந்த வயர்களை எடுத்து கடித்துவிட்டதாகவும், உடனடியாக மருத்துவ உதவி அளித்து, மருத்துமனைக்குக் கொண்ட சென்றபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ராம்குமாரின் உடலைப் பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், அதனைத் தற்கொலை என்றே உறுதிப்படுத்தியிருப்பதாகவும் சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆணையத்தின் சந்தேகத்துக்கு என்ன காரணம்?
ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அவர் துன்புறுத்தப்பட்டு இறந்திருக்கலாம் எனக் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது தனது உத்தரவை மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ளது.
அதன்படி, புழல் சிறையில் கைதிகளைக் கண்காணிக்க குறைவான அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருப்பதாகவும் போதுமான அதிகாரிகளை நியமிக்காத தமிழ்நாடு அரசையே இந்த விவகாரத்தில் பொறுப்பாக வேண்டுமென்றும் ஆணையம் கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளதே தவிர, அவரே அதை வைத்துக்கொண்டாரா என்பதைச் சொல்லவில்லை. மேலும் டாக்டர் செல்வக்குமார் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம்குமார் உடலில் இருந்த 9ஆம் எண் காயத்தை ராம்குமாரால் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ராம்குமார் அரசின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார். அவரை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆகவே ராம்குமாரின் மரணத்திற்கு மாநில அரசே பொறுப்பு. இந்த விவகாரம் குறித்த மாநில அரசு சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும். ராம்குமாரின் தந்தை பரமசிவனுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டை மாநில அரசு அளிக்க வேண்டும்.
மேலும் தங்கள் பாதுகாப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பிற்கு கூடுதல் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
உடற்கூராய்வுக்குப் பிறகு கவனத்தை ஈர்த்த வழக்கு
2016ஆம் ஆண்டு செப்டம்பரில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
சென்னை ராயப்பேட்டை அரசு பேராசிரியர்கள் டாக்டர் ஆண்டாள் பழனி, டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் மாநில மனித உரிமைகள் முன்பு அளித்த வாக்குமூலத்தில். ராம்குமாரின் மூளை மற்றும் இதய திசுக்களை, அக்டோபர் 7, 2016 அன்று பரிசோதித்ததில், நல்ல நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களும் நல்ல நிலையில் இருப்பதாகச் சான்றளிக்கப்பட்டது.மின்சார அதிர்ச்சியின் போது மேற்கூறிய திசுக்களில் மாற்றம் ஏற்படுமா என்ற மனுதாரரின் வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவித்தனர். இருப்பினும், அத்தகைய மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
"ராம்குமாரின் திசுக்களை பரிசோதித்ததில், மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.மேலும், ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் உள்ள விபத்துப்பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சையத் அப்துல் காதர், செப்டம்பர் 18, 2016 அன்று ராம்குமாரின் உடல் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டபோது, சிறை மருத்துவர் உடலுடன் வந்ததாகக் கூறினார். விபத்து பதிவேட்டின் நகல்களோ, சிறையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களோ தன்னிடம் வழங்கப்படவில்லை என்று காதர் கூறினார்.இதன் மூலம் சிறையில் ராம்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவருக்கு தெரியவில்லை"சிறையில் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. நான் வழங்கிய விபத்துப் பதிவேட்டில், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான் குறிப்பிடவில்லை," என்று காதர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கூறினார். ராம் குமாருக்கு கடுமையான மோர்டிஸ் (உடலின் விறைப்பு) அறிகுறிகள் இருந்தன. இது பொதுவாக இறந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு நிகழ்கிறது."நான் பார்த்த காயங்கள் மின்சார அதிர்ச்சியைக் குறிக்கவில்லை. உடலை பிணவறைக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், வெளிப்புற காயங்களை நான் கூர்ந்து கவனிக்கவில்லை. முதல் படிவத்தில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் குறித்து தவறாகப் பேசியுள்ளேன்," என்று அவர் ஆணைய விசாரணையின்போது நடந்த குறுக்கு விசாரணையில் தெரிவித்தார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியராக இருந்த சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வேலைக்குச் செல்வதற்காக ரயிலில் காத்திருந்தபோது ராம்குமாரால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் சில வார தேடுதலுக்குப் பிறகு ராம் குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை கைதியாக வைத்திருந்த நிலையில், அவர் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.