நாய் வயிற்றில் பிறந்த ஓநாய்.. சீன விஞ்ஞானிகள் சாதனை..
23 Sep,2022
சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், உலக வரலாற்றில் முதன்முறையாக ஆர்க்டிக் ஓநாயை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது. குளோன் செய்யப்பட்ட ஆர்க்டிக் ஓநாய் மாயாவின் வீடியோவை பெய்ஜிங் ஆய்வகத்தில் பிறந்த 100 நாட்களுக்குப் பிறகு வெளியிட்டது.
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட மாயா ஆரோக்கியத்துடன் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாயா உருவாக்க பயன்படுத்தப்பட்ட அடிப்படை செல் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் தோல் மாதிரியிலிருந்து எடுக்கப்பட்டது. அது வளர தேவையான முட்டை ஒரு பெண் நாயிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் அதன் வாடகைத் தாய் ஒரு பீகிள் இன நாய் என்று அறிக்கை கூறுகிறது.
ஆர்க்டிக் ஓநாயின் குளோனிங் என்பது , ஒரு பெண் நாயின் அணுக்கருவைக் கொண்ட ஓசைட்டுகள் மற்றும் காட்டுப் பெண் ஆர்க்டிக் ஓநாயின் சோமாடிக் செல்கள் ஆகியவற்றிலிருந்து 130 புதிய கருக்களை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதில் இருந்து 80 கருக்கள் ஏழு பீகிள்களின் கருப்பைக்கு மாற்றப்பட்டன, அவற்றில் ஒன்று ஆரோக்கியமான ஓநாயாக பிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குளோனிங் தொழில்நுட்பம் மிகவும் அரிதான மற்றும் அழியும் ஆபத்தில் இருக்கும் விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய உதவும்.
நாய்கள் பழங்கால ஓநாய்களின் மரபணுவில் இருந்து திரிந்து வந்ததால், இரண்டிற்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகிறது. இதனால் குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆர்க்டிக் ஓநாய்களை உருவாக்குவதில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதால், ஓநாய்க்கு வாடகை தாயாக ஒரு நாயைத் தேர்ந்தெடுத்தோம் என்று நிபுணர்கள் குளோபல் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
குளோன் செய்யப்பட்ட ஓநாய் மாயா இப்போது தனது வாடகை தாய் பீகிளுடன் ஒரு ஆய்வகத்தில் வாழ்கிறது. சிறிது காலம் கழித்து அது வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஹார்பின் போலார்லேண்டில் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறுகிறது.