(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஆறாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொன்மை மிக்கது. நம் முன்னோர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தாழியினுள் தன் தாத்தா/பாட்டி உடலை வைத்துப் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்தனர் என்பதை விடப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனலாம்.
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர்.
பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர்.
இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள்; அவர்களின் ஆன்மா அவர்கள் உடலுடன் பாதுகாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் என்பதுதான் பண்டைய மக்களின் எண்ணமாக இருந்திருக்கும். மேலும், "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிலப்பதிகாரம். அதாவது முந்தய பிறவியின் பாவ புண்ணியம் இப்பிறவியிலும் விடாது துரத்தும் எனப் பொருள் கொள்ளலாம்.
மறுபிறவியை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்களான சியாம் சிங்கா ராய், அனேகன், சைத்தான், அருந்ததி, சடுகுடுவண்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இவை எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இன்றைய காலத்திலும் மக்களிடையே மறுபிறவியின்மேல் நம்பிக்கை உள்ளது எனக் கொள்ளலாம்.
இயன் ஸ்டீவென்சன் ஒரு மனநல மருத்துவர். இவர் 1957ல் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் மனநலத்துத் துறைத் தலைவராக இருந்தவர். இவர் ஆன்மீக உளவியல் (Parapsychology) என்ற துறையில் நம்பிக்கை உள்ளவர். ஆன்மிக உளவியல் என்பது தொலைவிலுள்ள பொருட்களைத் தொடாமல் நகர்த்தல், மரண அனுபவம், மறுபிறப்பு, ஆவியுடன் தொடர்பு மற்றும் பிற இயல்புக்கு ஒவ்வாத உளவியல் சார்ந்த ஆய்வாகும்.
மருத்துவர் ஸ்டீவென்சன் உலகில் பல இடங்களில் குழந்தைகள் முந்தைய பிறவி பற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டார். அத்தகைய குழந்தைகளின் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பேசுபவர்களை உலகம் முழுவதும் சுமார் 3,000 பேரைக் கண்டறிந்தார். இந்தியா, பர்மா, இலங்கை, மற்றும் பிரான்ஸ் என நாடு நாடாகச் சுற்றி மறுபிறப்பு பற்றி ஆராய்ச்சி செய்தார்.
அவர் கண்டறிந்தது என்னவென்றால், இந்த 3,000 பேரில் இரண்டு வயது முதல் ஆறு வயதுக் குழந்தைகளே இந்த பூர்வஜென்ம அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய குழந்தைகள் சராசரிக்கும் அதிகமான புத்திசாலிகளாக இருப்பதையும் கண்டறிந்தார்.
பெரியவர்கள் யாரும் இதுமாதிரி பூர்வ ஜென்மத்தைப் பற்றிப் பேசவில்லை. இந்த குழந்தைகளின் கூற்றுப்படி முந்தைய பிறவியில் இவர்களில் 70 சதவிகிதத்தினர் அகால மரணமடைந்தவர்கள். மேலும் இவர்களில் 90 சதவீதத்தினர் முற்பிறவியில் ஆணாக இருந்தால் ஆணாகவும், பெண்ணாக இருந்திருந்தால் பெண்ணாகவும்தான் மறுபிறவி எடுக்கின்றனர்.
மேலும் சில குழந்தைகளின் உடலில் முற்பிறவியிலிருந்த மச்சங்கள் மற்றும் தழும்புகளையும் ஸ்டீவென்சன் கண்டறிந்தது வியப்பாகத்தான் உள்ளது.
மறுபிறப்பைப் பேசும் இந்த குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் மறுபிறப்பை நம்பும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். மீதமுள்ள 40 சதவிகிதத்தினர் மறுபிறப்பை மறுக்கும் மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்.
அது என்ன? மறுபிறப்பை நம்பும் மதம் மற்றும் மறுபிறப்பை நம்பாத மதம்?
இந்து மற்றும் புத்த மதங்கள் மறுபிறப்பை வலியுறுத்துகின்றன. மாறாக பெரும்பாலான கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மத அமைப்பினர்கள் மறுபிறப்பை மறுக்கின்றனர்.
சுமார் 34 ஆண்டுக் காலம் ஸ்டீவென்சன் தேடி கண்டறிந்த மறுபிறவி நிகழ்வுகள் மொத்தம் 225 ஆகும். இவைகளை மறுபிறப்பு உயிரியல் என்ற 2,268 பக்கங்கள் கொண்ட இரு புத்தகங்களில் விவரித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மறுபிறவி நிகழ்வுகளில் ஒன்றைப் பார்க்கலாம்.
இலங்கையில் ஒரு அம்மா "கட்டராக்கம்மா" என்ற ஓர் ஊர்ப் பெயரை சத்தமாகக் கூறியதைக் கேட்ட மூன்று வயதுக் குழந்தையொன்று உடனே பல விசயங்களைப் பேச ஆரம்பித்திருக்கின்றாள். அவைகளை விபரமாகப் பார்க்கலாம்.
அந்த குழந்தை கட்டராக்கம்மாவில் முந்தைய பிறவியில் பிறந்ததாகவும், தன் மனவளர்ச்சி குன்றிய சகோதரர் தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாகவும், பின் ஆற்றில் மூழ்கி இறந்ததாகவும், தன் பூர்வஜென்ம தந்தை வழுக்கைத் தலையுடன் இருந்ததாகவும், தந்தையின் பெயர் கெராத் எனவும் அவர் கட்டராக்கம்மாவில் உள்ள புத்த கோயில் அருகில் பூ வியாபாரம் செய்வதாகவும் தான் வாழ்ந்த வீட்டில் கண்ணாடி மேற்கூரை இருந்ததாகவும் அந்த வீட்டின் பின்னால் ஒரு நாய் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு தினமும் இறைச்சி உணவு கொடுத்து வளர்க்கப்பட்டதாகவும் அந்த வீட்டின் அருகில் ஒரு இந்து கோயில் உள்ளதாகவும் அங்கே மக்கள் அதிகமாக தேங்காய் விடலை போடுவதாகவும் கூறியிருக்கிறாள். இதனை Dr. ஸ்டீவென்சன் ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விபரமாக அந்த குழந்தையிடம் பேசி தெரிந்து கொண்டார்.
ஸ்டீவென்சன் பின்னர் கட்டராக்கம்மாவுக்குச் சென்று என்ன நடந்தது எனப் பார்த்துள்ளார். அந்தக் குழந்தை கூறியது போல் பூ வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி இருந்திருக்கின்றார். அவரும் புத்த கோயில் அருகில்தான் வியாபாரம் பார்த்து வருகிறார். ஆனால் அவருக்குத் தலையில் நிறைய முடி இருந்துள்ளது.
தலையில் முடி இல்லாமல் அந்த வியாபாரியின் தாத்தா இருந்திருக்கின்றார். வியாபாரியின் பெயர் கெராத் இல்லை. ஆனால் அந்த குடும்பத்தில் கெராத் என்ற பெயருள்ள ஒருவர் இருக்கிறார். தன் இரண்டு வயதுக் குழந்தை மனவளர்ச்சி குன்றிய மகனுடன் ஆற்றங்கரையில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து இறந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எப்படி ஆற்றில் விழுந்தாள் என அவருக்குத் தெரியவில்லை. பூ வியாபாரி வீட்டில் நாய் வளர்க்கவில்லை. ஆனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் நாய் வளர்த்து வந்துள்ளார். அதற்கு தினமும் இறைச்சி போட்டு வந்துள்ளதை கண்டறிந்துள்ளார்.
பூ வியாபாரி குடும்பமும் பூர்வஜென்ம நினைவைச் சொல்லிய குழந்தையின் குடும்பமும் ஒன்றையொன்று சந்தித்தது இல்லை. பின் எப்படி இந்த குழந்தையால் இத்தனையையும் விபரமாகச் சொல்ல முடிந்தது?
ஸ்டீவென்சன் தண்ணீரில் மூழ்கி இறந்த இரண்டு வயதுக் குழந்தை இப்போது மறுபிறவி எடுத்துள்ளது என்கின்றார்.
ஸ்டீவென்சனின் மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியில் கண்டறிந்தது என்னவென்றால், மறுபிறவி பற்றிப் பேசும் குழந்தைகளின் பிறப்புக்கும் முற்பிறவியில் அவர்கள் இறந்த காலத்திற்கும் இடையே சராசரியாக 16 மாதங்கள் இருப்பதாகக் கண்டறிந்தார்.
அதே நேரத்தில் இறந்த பின் ஒருவரின் ஆன்மா 46 நாட்கள் மறுபிறவிக்காகவோ அல்லது முக்திக்காகவோ காத்திருக்கிறது என்று புத்த மதத்தினர் நம்புகின்றனர். அந்த நாளில் மதச்சடங்குகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இறந்தபின் 41ஆம் நாள் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாள் வரை இறந்தவரின் ஆன்மா அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றி வருவதாகத் தமிழகத்திலுள்ள பல மக்கள் நம்புகின்றனர். மேலும் இறப்பிலிருந்து 16வது நாளை உத்தரகிரியை (கருமாதி) எனவும் கிரேக்கியம் எனவும் அழைக்கின்றனர். கிரேக்கியத்தை இப்போது இறப்பிலிருந்து 13 நாளில் அனுசரிக்கின்றனர். இறப்பிலிருந்து 30வது நாளை மாசியம் என அனுசரிக்கின்றனர். இது தவிர வருடாவருடம் அந்த ஆன்மாவுக்குச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
மக்களின் நம்பிக்கையும் மருத்துவர் ஸ்டீவென்சனின் ஆராய்ச்சி முடிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. காரணகாரியமாகவே தமிழக மக்கள் இந்த சடங்குகளை நடத்துகின்றார்களோ என நம்பத் தோன்றுகின்றது. ஆனால் உண்மை என்னவென்று சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிறந்த கன்று எப்படி பசுவின் மடுவைக் கண்டறிந்து பால் குடிக்கிறது?
கன்றிற்கு எப்படி மடுவில்தான் பால் கிடைக்கிறது எனத் தெரிகிறது? முன் பிறவியின் அனுபவத்தில்தான் கன்று மடுவைக் கண்டறிந்து பால் குடிக்கிறது எனவும் சிலர் கூறுவதைக் கேட்டு இருக்கின்றேன்.
ஆனால் உயிர்-வேதியியல் (Biochemistry) இதனை முற்றிலும் மறுக்கிறது. கன்றின் மூக்கில் பால் வாசனையைக் கண்டறியும் புரதங்கள் உள்ளன. அவை வாசனை வரும் திசையைக் கண்டறிந்து மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. அதன்படி கன்று நகர்ந்து மடுவைத் தானாகவே கண்டறிகிறது என உயிர் வேதியியல் ஆராய்ச்சி நிரூபித்திருக்கின்றது.
ஒருவர் கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி மனித உடலில் இருக்கும் செல்லின் சராசரி வாழ்நாள் என்ன என தேடியிருக்கின்றார். செல்லின் சராசரி வாழ்நாள் 7ல் இருந்து 10 வருடங்கள் எனத் தெரிந்து கொள்கின்றார். மனித செல்லின் வாழ்நாள் சில வருடங்களாக இருக்கும் போது எப்படி சிறுவயது அனுபவங்கள் 70 வயதிலும் நினைவில் இருக்கிறது? இது எவ்வாறு சாத்தியமாகும்? ஆன்மா ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்குச் செல்வதால்தான் இது சாத்தியம் என அவர் நம்பத் தொடங்குகிறார்.
மனித செல்லின் சராசரி வாழ்நாள் 7ல் இருந்து 10 வருடங்கள் என்பது உண்மை தான். உதாரணமாக, நம் வாயின் உட்பகுதியில் உள்ள சில செல்கள் ஒரு நாளும், நம் தோலில் உள்ள செல்கள் 30 நாட்களும், எலும்பு செல்கள் 30 வருடங்களும், நம் மூளை செல்கள் நீண்ட ஆயுளாக 70 வருடங்களுக்கு மேலும் உயிர் வாழக்கூடியவை. இவ்வாறாகப் பல நூற்றுக்கணக்கான செல்களின் சராசரி வாழ்நாள்தான் 7ல் இருந்து 10 வருடங்களாகும்.
ஆனால் மூளையில் உள்ள செல்கள் 70 வயதுக்கும் மேல் வாழக் கூடியவை என்பதை மறக்கக்கூடாது. மேலும் செல்கள் கூட்டமாக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நினைவுகள் நம் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. அதனால்தான் நம் சிறுவயது அனுபவங்கள் தள்ளாத வயதிலும் நினைவில் உள்ளன. செல்லுக்குச் செல் ஆன்மா தாவுகிறது என்பதை செல்லியல் (Cell Biology) உண்மைகள் இவ்வாறு மறுக்கின்றன.
நம் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மூளையில் பதிந்துள்ளன. இந்த எண்ணங்கள் மூளையை அல்லது உடலை விட்டு வெளியே ஆன்மாவாக நிலைத்திருக்கும் சக்தியுள்ளது என மறுபிறவியை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஆழமாக நம்புகின்றனர்.
இதனைக் கீழ்க்கண்ட ஒரு சோதனையின் மூலம் விளக்க முடியுமா எனப் பார்க்கலாம்.
மனித உயிரை ஆன்மா எனப் புரிந்து கொண்டால், அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா உண்டு என்பதனை மறுக்கமுடியாது. நான் மண்புழுவை கொண்டு கடந்த 14 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றேன். மண்புழுவின் தலையை வெட்டிவிட்டால் அது சாகாது. எட்டு நாட்களில் அடிப்படையான மூளையை மறுபடியும் உருவாக்கிவிடும்.
சில மண்புழுக்களைத் தண்ணீரில் போட்டோம். அவை ஒன்றையொன்று கட்டிப்பிடித்துக் கொண்டு சுற்றி வைக்கப்பட்ட மல்லிகைப்பூ சரப்பந்து போல் காட்சி அளித்தன. அதாவது மண்புழுக்கள் பயத்தினால் ஒன்றையொன்று கட்டிப்பிடித்துக் கொண்டன. ஆனால் தலையை வெட்டிய மண்புழுக்கள் அவ்வாறு செய்யவில்லை. இவை தனித்தனியாகத்தான் இருந்தன. மேலும் மண்புழு தன் மூளையின் ஒரு பகுதியை உருவாக்க 8 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. புதிய மூளை உருவான மண்புழுக்களைத் தண்ணீரில் போட்டால் இவை ஒன்றோடொன்று கட்டிப்பிடித்துக் கொள்கின்றன.
இந்த சோதனையை மாணவர்களுக்கு படமிட்டுக் காட்டினேன். அப்போது துடிப்பான ஒரு மாணவன் புதிய மூளையைக் கொண்ட மண்புழுவிற்குப் பழைய நினைவுகள் வருகிறதா என ஒரு சிக்கலான கேள்வி கேட்டான். இதுவும் சரியான கேள்விதான். இந்த மண்புழுக்களில் என்னதான் நடக்கின்றது? பழைய ஞாபகங்கள் மண்புழுவின் புதிய மூளைக்குள் எப்படி வந்தன? அதன் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மூளையை விட்டு வெளியே நிலைத்திருந்ததா?
இந்த கேள்வியை மறுவுருவாக்க உயிரியலின் (Regenerative biology) உதவிக் கொண்டு கீழ்க்கண்டவாறு விளக்கலாம். தலை வெட்டப்பட்ட மண்புழுக்களால் 7 நாட்கள் வரை ஒன்று சேர முடியவில்லை. எட்டாவது நாள் ஒன்று சேர்கின்றன.
இதற்குக் காரணம், ஒன்று சேரத் தேவையான தகவலைத் தரவல்லஅடிப்படை மூளை மற்றும் அதில் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள் தான். இவை 8வது நாளிலிருந்துதான் முழுமையாக உற்பத்தியாகி வெளிவரத் தொடங்குகின்றன. ஒருவகையான கூட்டு வேதிவினைகள்தான் இந்த மண்புழுக்கள் ஒன்றிணையும் திறனுக்குக் காரணம். வேறொன்றுமில்லை.
இந்த ஆய்வை இன்னும் சிறந்த முறையில் செய்யலாம். மண்புழுக்களை ஏதாவது ஒரு வேலைக்குப் பழக்கவேண்டும். பின்னர் இந்த மண்புழுக்களின் தலைகளை வெட்டிவிடவேண்டும். புதிய மூளை வளர்ந்த பின்னர் அந்த மண்புழுவிற்கு நாம் பயிற்சி அளித்த பழைய நினைவுள்ளதா எனப் பார்க்கலாம். என்ன வேலைக்கு மண்புழுவைப் பழக்குவது? நிறைய யோசிக்க வேண்டும். இந்த சோதனையை எதிர்காலத்தில் செய்து பார்க்க வாய்ப்புள்ளது.
அதே வேளையில், ஸ்டீவென்சன் ஆராய்ச்சி முறைப்படியானது இல்லை. இதனை ஏற்க முடியாது என்று எதிர்க்கும் விஞ்ஞானிகள்தான் உலகில் அதிகம். காரணம் ஒரு குழந்தை ஒரு கதை சொன்னால் அந்த கதையை ஒத்த ஒருவர் இந்த பூமியில் வாழும் கோடான கோடி மக்களில் யாராவது இருக்க வாய்ப்புள்ளது. இந்த இருவேறு நிகழ்வுகள் ஒரே மாதிரியாக உள்ளன எனலாம்.
அதாவது குழந்தை கூறியது மாதிரி ஒரு குடும்பத்தில் நடந்திருக்கின்றது எனலாம். இதை வைத்து மறுபிறப்பு பூர்வஜென்மம் எனக் கதை விடக்கூடாது என்பது மற்ற விஞ்ஞானிகளின் கருத்து. மேலும் மனோதத்துவ அடிப்படையில் முந்தைய பிறவி பற்றிப் பேசும் குழந்தைகளைதான் ஆராய்ச்சி செய்யவேண்டுமே தவிர மறுபிறப்பைப் பற்றி அல்ல என எதிர்ப்புக் குரல் வலுவாக ஒலிக்கிறது. குழந்தைகள் பொய் பேசாது என்பது நம் சமூகத்தில் உள்ள நம்பிக்கை. ஆனால் நாம் விழுந்து விழுந்து சிரிக்கும்படி கற்பனையை உண்மை மாதிரியே பேசும் குழந்தைகளும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த மறுபிறப்பு உண்டா இல்லையா என நிரூபிக்க ஒரு வழி உள்ளது. ஸ்டீவென்சனின் ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து, மறுபிறப்பு எப்படி நடக்கிறது என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் மறுபிறப்பு மற்றும் பூர்வஜென்ம நம்பிக்கையின் மேல் எதிர் கேள்விக்கணைகளின் எண்ணிக்கையும், கேள்விகளின் வலிமையும் அதிகமாகத்தான் இருக்கும்.
ஆற்றலை ஆக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றலாம் என்பது இயற்பியலின் ஆற்றல் மாறாக் கோட்பாடு (Law of conservation of energy). மறுபிறவி உண்டு என்றால் ஆன்மாவும் ஆற்றல் மாதிரிதான் செயல்படமுடியும். பூமியில் உள்ள ஆன்மாக்களின் எண்ணிக்கை
எப்போதும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆன்மா மற்றொரு வகையான உடலுக்குள் புகுந்து மாறுபட்டதாகக் காட்சியளிக்கலாம். சைவ சித்தாந்தமும் இதனைத்தான் சொல்கிறது.
ஆனால் பூமி உருவானபோது நெருப்புப் பந்தாக இருந்தது. பின் படிப்படியாகக் குளிர்ந்தது. பின்னர் பூமியில் முதல் உயிரி தோன்றியது. இந்த முதல் உயிரியின் தொப்புள் கொடி உறவுகளே இன்றைக்குப் பூமியில் வாழும் மொத்த உயிரினங்கள். அதன்படி ஆன்மாக்களின் எண்ணிக்கை ஒரு உயிரிலிருந்து பூமியில் படிப்படியாக உயர்ந்துள்ளது என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை. ஆன்மாவின் எண்ணிக்கை
மாறாது என்ற சைவ சித்தாந்த கருத்தும் உண்மை இல்லை. ஆன்மாக்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்யும் சாத்தியக்கூறுகள் இன்றைய உலகில் எதுவும் இல்லை.
இந்த நிலையில் ஸ்டீவென்சன் பிப்ரவரி மாதம் 2007ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் விட்டுச்சென்ற மறுபிறப்பு ஆராய்ச்சி பணியை, அமெரிக்காவில் உள்ள UVA மருத்துவ மைய (University of Virginia Medical Center) மனநல துறையில் பணியாற்றும் இணைப் பேராசிரியரான மருத்துவர் ஜிம் டக்கர் (Dr. Jim Tucker, MD., Ph.D.,) தொடர்ந்து வருகின்றார். இவராவது குழந்தைகள் சொல்லும் கதைகளை சேகரிப்பதை விட்டுவிட்டு அறிவியல் பூர்வமாக மறுபிறப்பை நிரூபிப்பாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அது வரையில் இம்மாதிரியான கதைகளின் அடிப்படையில் மறுபிறப்பு உண்டு என அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நானும் தான்.
(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் சுதாகர் சிவசுப்பிரமணியம், 1999இல் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராவும் செயல்படுகிறார். மண்புழுவைக் கொண்டு உறுப்புக்களின் மறுஉருவாக்கம் மற்றும் வயதாவது சம்பந்தப்பட்ட நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இவர் மண்புழுக்களின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்தவர்.)