சிவராத்திரியில் உள்ள வகைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!,
27 Jul,2022
ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும்.
மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள்.
சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம். மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம்.
மாத சிவராத்திரி எந்த தெய்வங்களால் வழிபடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும்.
மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.
சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது. வைகாசி மாதம் : வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது. ஆனி மாதம் : வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது. ஆடி மாதம் : தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது. கார்த்திகை மாதம் : 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது. மார்கழி மாதம் : வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது. தை மாதம் : வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது. மாசி மாதம் : தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது. பங்குனி மாதம் : வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.