மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன்பாக பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
எனினும் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே மாணவி மரணத்துக்கு நீதி வேண்டு நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில் தற்போது இறப்பதற்கு முன்பாக மாணவி பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்கிறார். 12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மற்றொரு வீடியோவில், வகுப்பறைக்குள் மெதுவாக நடந்துவந்த ஸ்ரீமதி, மேஜைக்கு வந்து படுத்துக்கொள்கிறார்.
அருகில் பல்வேறு மாணவிகள் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மாணவி ஸ்ரீமதி சோர்வாக இருந்ததையோ, அவர் மேஜையில் மயங்கி விழுந்ததையோ கண்டு கொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம் உண்மையானது அல்ல என்று ஸ்ரீமதியின் பெற்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “நான் நன்றாகத்தான் படிப்பேன், வேதியலில் நிறைய எனக்கு சமன்பாடு படிக்கவே வரவில்லை. அதனால் வேதியியல் ஆசிரியர் மிகவும் அழுத்தம் கொடுக்கிறார்,
ஒருநாள் வேதியியல் ஆசிரியர் கணித ஆசிரியரிடம் நான் நன்றாக படிக்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவர்களும் எனக்கு அழுத்தம் தர ஆரம்பித்தனர். விடுதியில் படிக்கவே மாட்டேங்கிறாயா என கேள்வி எழுப்பி என்னை திட்டினார்.எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் படிப்பதே இல்லை என இந்த இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து அனைத்து ஆசிரியர்களிடமும் என்னைப் பற்றி அவதூறாக கூறியுள்ளனர்.
இன்று காலை ஒரு ஆசிரியர் சரியாக படிக்கவில்லையா? என என்னிடம் கேள்வி எழுப்பினார். விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாய் என கூறினார். கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கணித ஆசிரியர் என்னை மட்டும் அல்ல சக மாணவர்களையும் தொல்லை செய்கிறார். சாந்தி மேடம் உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை.
எனக்கு இந்த ஆண்டு கட்டப்பட்ட அனைத்து கல்வி கட்டணத்தையும் எனது அம்மாவிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். புத்தக கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் கொடுத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நான் கொஞ்ச நாள் தான் விடுதியில் தங்கியிருந்தேன் ப்ளீஸ்! சாரி அம்மா... சாரி அப்பா’ என்று எழுதியுள்ளார் ஸ்ரீமதி. மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம் தனது மகளின் கையெழுத்து இது இல்லை என ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்