அயர்லாந்து 'தீ உற்சவம்'...உலக சாதனையாக உருவெடுத்தது!
14 Jul,2022
அயர்லாந்தில் ஆண்டு தோறும் நடைபெறும் தீ உற்சவ விழா நடப்பாண்டில் புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது.
அயர்லாந்தில் ஆண்டு தோறும் ஜூலை 12 ஆம் தேதியன்று பான்பைர் (bonfire) எனப்படும் தீ உற்சவ விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
நம் ஊரில் கார்த்திகை மாதத்தில் கொளுத்தப்படும் சொக்கப்பனை போலவே இந்த தீ உற்சவ விழாவும் கொண்டாடப்படுகிறது. ஊரின் குறிப்பிட்ட இடத்தில் மரக்கட்டைகள் உயரமாக அடுக்கப்படுகின்றன.
இரவில் அதற்கு தீ வைத்து எரிக்கப்படுவதோடு விழா நிறைவடைகிறது. அப்போது பருந்துப் பார்வையில் பார்த்தால் தீபத்திருவிழா போல ஒளி வெள்ளத்தில் காட்சி அளிக்கும் ஊரை காண முடியும்.
இந்த விழாவில் ஒரு சாதனை செய்ய முடிவெடுத்த பெல்ஃபாஸ்ட் நகரத்தினர், தீ வைப்பதற்காக கட்டமைக்கும் கோபுரம் போன்ற அமைப்பை மிக உயரமாகச் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இது உலக சாதனையாகவே மாறியது. 202 அடி உயரமான பிரமாண்டமான கோபுர அமைப்பு காண்போரை வியக்க வைத்தது.1690 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் நினைவாகவே இந்த தீ உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.
புரோட்டஸ்டண்ட் பிரிவு அரசரான வில்லியம், கத்தோலிக்க பிரிவு அரசரான ஜேம்ஸை இந்தப் போரில் தோற்கடித்தார். போரின் போது படைவீரர்களுக்கு வழிகாட்ட ஆங்காங்கே பிரமாண்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
தொலைதூரத்தில் அந்த வெளிச்சத்தை கண்டவர்கள் தங்கள் இலக்குகளுக்கு எளிதில் சென்றடைந்தனர். இதனை நினைவு கூரும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் 202 அடி உயர கோபுரம் போன்ற கட்டுமானத்திற்கு தீ வைக்கப்பட்டது.
தீ உற்சவத்திற்காக 202 அடி உயர கட்டுமானம் தீ வைத்து எரிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன