பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது
08 Jul,2022
திட்டக்குடி அருகே பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 15 வயது பள்ளி சிறுமி. இவர் அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 முடித்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22-ந்தேதி சக மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கேக் வெட்டிய போது, பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மாணவியுடன் 10 ம் வகுப்பில் படித்து வரும் ஆவினங்குடியை சேர்ந்த ஒரு மாணவர், அந்த மாணவியிடம் பிறந்தநாள் விழாவில் நீ கொடிக்களத்தை சேர்ந்த மாணவருடன் எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது, உனது வீட்டில் கொடுத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார். இதை உன் வீட்டில் தரக்கூடாது என்றால் நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வர வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்பேரில் கடந்த 1-ந்தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள அந்த மாணவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன், மிரட்டல் விடுத்த அந்த மாணவர் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் சிக்கிய அந்த மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும், உள்ளே மாணவியுடன் 10ம் வகுப்பு படித்து வரும் மேலும் 2 மாணவர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த 3 மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்துவந்தார்.
இந்த சூழ்நிலையில் அந்த 3 மாணவர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு வேலைக்காக சென்ற கொடிக்களத்தை சேர்ந்த மாணவருக்கு தெரியும் வகையில் அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் இருந்ததால், அவருடன் இருக்கும் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த மற்றொருவரின் செல்போனுக்கு கொடிக்களம் மாணவருக்கு தெரியும் வகையில் வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரியவந்தது. அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டல் விடுத்தார்.