தமிழக பெண்களை குறிவைக்கும் சிங்கப்பூர் போலீஸ் - தாலி கட்டி கைவரிசை!
14 Jun,2022
தமிழக பெண்களை குறிவைத்து திருமணம் முடிக்கும் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரி ; பெண் வீட்டாரிடம் கோடி கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்
தூத்துக்குடி சாமுவேல்புரம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மகள் அமீர்நிஷாவை சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் முகமது ரபீக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்தின் போது 101 பவுன் தங்க நகைகள், 40 பவுன் மஹர் எனும் மணக்கொடை, ROLEX வாட்ச், 13,977 சிங்கப்பூர் டாலர், பிளாட்டின மோதிரம், மற்றும் ரொக்க தொகையாக 5000 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை சீதனமாக பெண் வீட்டார் கொடுத்திருக்கிறார்கள்.
ஆயிரம் கனவுகளோடு புது வாழ்க்கையை தொடங்கிய அமீர்நிஷாவுக்கு அது நீண்ட நாட்களாக நீடிக்கவில்லை. திருமணமான ஒரு மாதத்திற்குள் குடும்பத்துடன் பெண்ணை கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் தலாக் நோட்டீஸ் கொடுத்து பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெண்ணிற்கு போட்ட நகைகளையும், அவரின் படிப்பு சான்றிதழ்களையும் முகமது ரபீக் அபகரித்துக் கொண்டார். இந்நிலையில், கணவரை பிரிந்து ஏக்கத்தோடு தந்தை வீட்டில் இருந்த பெண்ணிற்கு மேலும் பல அதிர்ச்சி சம்பவங்கள் காத்திருந்தது.
முகமது ரபீர் திருவாரூர் மாவட்டம் அத்திகடையில் ஏற்கனவே ஒரு பெண்னை திருமணம் முடித்து இதே பாணியில் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அது குறித்து விசாரித்த போது எந்த பயமும் இல்லாமல் நிதானமாகப் பதிலளித்திருக்கிறார், முகமது ரபீக். இதற்கிடையே, தற்போது அவருக்கு 3வது திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் கிடைத்து அமீர்நிஷாவின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். உடனே அவரை தடுத்து நிறுத்த சென்ற போது காவல்துறை உதவியுடன் முகமது ரபிக் தப்பிச் சென்றுவிட்டார் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மீண்டும், மீண்டும் இதுபோல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகள் கொள்ளையடிக்கும் சிங்கப்பூர் போலீஸ் அதிகாரி முகமது ரபீக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என
பாதிக்கப்பட்ட பெண்னின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து மோசடி மன்னன் முகமது ரபீகை கைது செய்ய காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.