பாலஸ்தீனர்கள் இடையே மோதல்: 70-க்கும் மேற்பட்டோர் காயம்
17 May,2022
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் படுகாயமடைந்தார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த லாவிட் ஷெரீப் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, பாலஸ்தீனர்கள் சிலர் இஸ்ரேலிய படையினர் மீது கற்கலையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் வீசினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 77 பேர் காயமடைந்தனர்.
கடந்த புதன்கிழமை மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். ஷெரீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது இஸ்ரேலிய படையினரா? பாலஸ்தீனத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பா? என்ற தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
1967-ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரில் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. முழுமையான ஜெருசலேமும் தங்களுக்கு சொந்தமானது என இஸ்ரேலும், தங்கள் எதிர்கால நாட்டிற்கான தலைநகராக கிழக்கு ஜெருசலேமை செயல்படுத்த உள்ளோம் என பாலஸ்தீனமும் கருதி வருவதால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான சண்டை ஜெருசலேமை மையமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.