15 வருடம் கழித்து வந்த தந்தையை துண்டா வெட்டிய மகன்.
01 May,2022
அப்போது அருகில் இருந்த மூத்த மகன் எங்களையும் எங்கள் அம்மாவையும் விட்டு பிரிந்து சென்று 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் ஏன் வந்தாய்? எனக் கேட்டு கரும்பாயிரத்தை எதிர்த்தார். அப்போது அவர்களுடன் கரும்பாயிரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தை காண வந்த தந்தையை மகன் கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை வெட்டி விட்டு தலைமறைவாகியுள்ள மகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை யில் நடந்துள்ளது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் போனால் அந்த வாழ்க்கையே நரகமாகிவிடும் என்பது எதார்த்தமாக உள்ளது. சில நேரங்களில் திருமணபந்தம் என்பது சிலரது வாழ்க்கையில் சடங்காகவே நடந்து முடிவதை காண முடிகிறது. குடும்பம், குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு என எதுவுமே இல்லாமல் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படிப் பட்டவர்களால் அந்த குடும்பம் மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் படும் துயரங்களுக்கு ஆளவே இல்லை எனலாம். அப்படி பல ஆண்டுகளாக குடும்பத்தை கைவிட்டு பிரிந்து சென்ற தந்தை மீண்டும் அந்த குடும்பத்தை காண வரும் போது அந்த சூழல் கணிக்க முடியாத உணர்ச்சி பிழம்பாகி விடும் என்பதை எல்லோருமே ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். அந்த பிழம்பு பாசத்தை வருடும் உணர்வு பூர்வமானதாகவும் இருக்கலாம் அல்லது வஞ்சம் தீர்க்கும் வன்மமாகவும் முடியலாம். ஆனால் வன்மாக முடிந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி அன்னை சத்யா நகர் சேர்ந்தவர் கரும்பாயிரம் (46) கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா (38) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவா (23) விக்ரம் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் நடந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தம்பதியர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். பிறகு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கரும்பாயிரம் வேலைக்கு செல்லும் இடத்திலேயே தங்க ஆரம்பித்தார், இதனால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு சிவசங்கரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசங்கரி உடன் வசித்து வந்தார்.
முதல் மனைவி கைவிட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன்தினம் முதல் மனைவி ராதிகா மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக கரும்பாயிரம் வெள்ளிக்கிழமை இரவு நாஞ்சிக்கோட்டை வந்தார். இந்நிலையில் தன்னை கை விட்டு சென்ற கணவன் கரும்பாயிரத்திடம் அதிகாலையில் ராதிகா தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் ராதிகாவை கரும்பாயிரம் தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த மூத்த மகன் எங்களையும் எங்கள் அம்மாவையும் விட்டு பிரிந்து சென்று 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் ஏன் வந்தாய்? எனக் கேட்டு கரும்பாயிரத்தை எதிர்த்தார். அப்போது அவர்களுடன் கரும்பாயிரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த மூத்த மகன் ஜீவா, கரும்பாயிரத்தை தான் வைத்திருந்த அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினார். இதில் கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை வெட்டிக் கொன்ற மகன் தலைமறைவாக இருந்து வருகிறார். மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 15 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை தேடிவந்த தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது