பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கவுன்சலிங் வழங்கிவருகிறோம். இந்த விவகாரத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது
“விருதுநகர் பாலியல் பிரச்னையை பொள்ளாச்சி சம்பவம்போல சும்மா விட மாட்டோம்!” – மார்ச் 23 அன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் இவை.
விருதுநகரில் இளம்பெண் ஒருவர் எட்டுப் பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் சட்டசபை வரை பூதாகரமாகியிருக்கிறது இந்த விவகாரம்!
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் கேட்டோம்ஸ “விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.
விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் குடோன் நடத்திவரும் 27 வயதான ஹரிஹரன், ஃபேஸ்புக்கில் இந்தப் பெண்ணிடம் அறிமுகமாகி, காதலித்துவந்திருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிஹரனின் மெடிக்கல் குடோனில் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஹரிஹரன் செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார்.
இந்த வீடியோவைத் தன் நண்பர்கள் மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோருக்கும் ஹரிஹரன் பகிர்ந்திருக்கிறார்.
அவர்களும் அந்த இளம்பெண்ணை அடைய ஆசைப்பட்ட நிலையில், ஹரிஹரனும் அதற்குச் சம்மதித்தார்.
தொடர்ந்து அந்த இளம்பெண்ணைத் தொடர்புகொண்ட மூவரும் வீடியோவைச் சொல்லி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேருடனும் ‘பப்ஜி’ விளையாட்டு மூலம் நண்பர்களான 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்குத் தெரிந்துள்ளது.
அவர்களும் அந்தப் பெண்ணைத் தங்களுடன் தனிமையில் இருக்கச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் அழுதும் கேட்காமல், ஆள் இல்லாத நேரமாகப் பார்த்து, அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தார்கள்.
இதை அந்தப் பெண் மேற்கண்ட கும்பலிடம் சொல்லி, ‘கல்யாணமாகப்போகுதுஸ இனியாச்சும் என்னை விட்டுடுங்கஸ’ என்று கெஞ்சியிருக்கிறார்.
ஆனால், அப்போதும் விடாமல் அவரை அந்த எட்டுப் பேரும் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்கள்.
இவர்களின் பாலியல் தொந்தரவுகளால் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
ஒருகட்டத்தில் இவர்களின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், இனி என்ன நடந்தாலும் சரி என்று விருதுநகர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தப் பெண்.
அதன் பிறகே ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டார்கள்’’ என்று போலீஸார் சொல்லி முடித்தபோது அதிர்ச்சியாக இருந்தது!
பொன்னி
பொன்னி
சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்ததை அடுத்து சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்,
“விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை ஒரு மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு நேரடியாகக் கண்காணிக்கும்படி காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தனி நீதிமன்றத்தில் விரைந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பள்ளி மாணவர்கள் நால்வரும் மதுரை தெப்பக்குளம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஜுனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருந்தார்.
ஹரிஹரன் 24-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக இருந்தார். இவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது தி.மு.க தலைமை.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட இருவருடனும் தொடர்பில் இருந்த விருதுநகர் தி.மு.க புள்ளிகள் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
மேலும், இவர்களுடனான தொடர்புகள், வாட்ஸ்அப் பதிவுகள், உரையாடல் எதுவும் செல்போனில் இருந்தால் அழித்துவிடுங்கள் என்றும் தங்களுக்குள் பகிர்ந்துவருகிறார்கள் கட்சிப்புள்ளிகள்!
ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன்
பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகப் பேசிய தென்மண்டல டி.ஐ.ஜி பொன்னி, ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு கவுன்சலிங் வழங்கிவருகிறோம். இந்த விவகாரத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
பெண்களை மதிப்பது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இது போன்ற பாலியல் புகார்களை, பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி சொல்வதற்குக் காவல்துறை சார்பில் புதிதாகத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறோம்’’ என்றார்.
பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகும் நிலையில், குற்றச் சம்பவத்தில் கைதுசெய்யப்படுபவர்களின் வயதும் அதிர்ச்சியடையவைக்கிறது. பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே சிந்தித்துத் தீர்வு தேடவேண்டிய நேரம் இது!