இராணுவம் தொடர்பில் போலி செய்தி வெளியிட்டால் 15 வருடங்கள் சிறை -
05 Mar,2022
இராணுவம் குறித்து போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ரஷ்யாவில் இன்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு 401 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை என்றும், யாரும் வாக்களிக்காமல் விலகி இருக்கவில்லை என்றும் இன்டர்ஃபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவுக்கு நாளை மேலவையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கு ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தால், வேண்டுமென்றே ரஷ்யாவின் ஆயுதப்படைகள் குறித்து தீவிர விளைவுகளை உருவாக்கும் பொய்யான தகவல்களை பரப்புவோரிடம் அபராதம் வசூலிக்கவும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறவும் முடியும் என மக்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன. அவ்வாறு, அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட செய்தி நிறுவனங்களை ரஷ்ய அரசு முடக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.