கோவை-கோவையில், கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் கைதான நபர், சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில், 'சிரிஞ்ச் கன்' எனப்படும் ஊசி துப்பாக்கி மூலம், பலரை தீர்த்துக்கட்டிய திடுக் தகவல் தெரியவந்துள்ளது.
கோவை, வெள்ளலுார், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சானு, 31; கால் டாக்சி டிரைவர். இவர், கோவை, ஓணாப்பாளையம், பங்களா கிளப் அருகே, கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இவ்வழக்கை விசாரித்த வடவள்ளி போலீசார், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், 45, அவரது மனைவி அமலோற்பவம், 40, ஆகியோரை கைது செய்தனர்.சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த கொலைகளில் இவர்களுக்கு தொடர்புடையது அம்பலமானது. போலீசாருக்கு போக்கு காட்டி, கோவையில் ஆறு ஆண்டுகளாக பதுங்கியிருந்துள்ளனர்.
இவர்களின் பின்னணியை விசாரித்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தளவிற்கு இவர்கள் கொடூரமான கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கொலைகாரன் ஸ்டீபன் ஒரு சீரியல் கில்லர். பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவன். சென்னையில் மட்டும் விஷ ஊசி செலுத்தி, எட்டு பேரை கொலை செய்துள்ளான். இவனது மனைவி, பல் டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவர் மீதும் இரு கொலை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு கும்பலிடம், 'விஷ ஊசி கொலை டெக்னிக்'கை கற்றுள்ளனர். குழந்தைகள் விளையாடும் பொம்மைத் துப்பாக்கி போன்று, விஷ ஊசி பொருத்தி சுடும் வகையிலான பிரத்யேக வடிவிலான இரு துப்பாக்கிகளை அந்த கும்பலிடம் வாங்கி உள்ளனர்.துாக்க மாத்திரை கலந்த திரவத்தை 'சிரிஞ்ச்'சில் ஏற்றி, துப்பாக்கியில் பொருத்தி ஒருவர் மீது சுட்டால், எறும்பு கடித்தது போன்ற சிறு வலி உணர்வுடன், அந்த ஊசி மனித உடலில் குத்தி நிற்கும். சம்பந்தப்பட்ட நபர் அடுத்த இரு நிமிடங்களில் மயக்கமடைந்துவிடுவார். அ
தன் பின், அந்நபரை அடித்துக் கொன்று, பணத்தை இவர்கள் கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.இம்முறையில் தான் கோவையில் கால் டாக்சி டிரைவர் சானுவையும் கொலை செய்துள்ளனர். கடந்த 2015ல், சென்னையில் நடந்த கொலை வழக்கில், போலீசாரால் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டனர். அங்கிருந்து தப்பிய இவர்கள், கோவையில் பதுங்கி இருந்துள்ளனர். இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் வருமானத்துக்கு என்ன செய்தனர்; வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டனரா, இவர்களால் வேறு யாரேனும் கொலை செய்யப்பட்டுள்ளனரா என, தெரியவில்லை. இந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இவர்களிடம் இருந்து இரண்டு ஊசி துப்பாக்கி, எண்ணற்ற மொபைல் போன் எண்கள் மற்றும் காலி 'ஸ்ரிஞ்ச்'கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்நபர்களின் பின்னணி குறித்து சென்னை போலீசிடமும் பேசினோம்.
சென்னையிலுள்ள ஸ்டீபன் வீட்டில், 110 சவரன் நகை, சில ஆண்டுகளுக்கு முன் களவு போயுள்ளது. இவ்வழக்கில், ஸ்டீபன் வீட்டு வேலைக்காரர் கைது செய்யப்பட்டார். நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தன்னையே போலீசார் தேடி வரும் நிலையில், அந்நகைகளை வாங்கச் சென்றால், போலீசார் கைது செய்துவிடுவர் என்பதால் இவ்வளவு காலமாக தலைமறைவாகவே இருந்துள்ளான். இந்த சீரியல் கில்லர் தம்பதி குறித்த தொடர் விசாரணையில், இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.