3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிகாலத்தினர் சமைத்து சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?
01 Feb,2022
உணவு சமைப்பது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்து வந்துள்ளது. பச்சையாக உணவுகளை சாப்பிடுவது ஒருபக்கம் இருந்தாலும், சமைக்கப்பட்ட உணவுகளில் எக்கச்சக்கமான வகைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. பண்டைய காலத்தில் சமைக்கப்பட்ட உணவுகள் தற்போது மீண்டும் புழக்கத்தில் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இருக்கும் உணவுகளை மக்கள் தேடி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த உணவுகளைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கீரை வகைகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர் என்ன தகவல் வெளியாகியுள்ளது.
ஆரோக்கியமான உணவுகளின் கீரைக்கு என்றுமே நிரந்தரமான இடம் உள்ளது. தினமும் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பல்வேறு வகையான கீரைகளை பலவிதங்களில் ருசியாக சமைக்கலாம். கீரை வகைகள் சமீபத்தில், சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உணவு வகை அல்ல. 3500 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு ஆப்பிரிக்காவில் மக்கள் கீரைகள் மற்றும் இலைகள் சமைக்கப்பட்டு வந்தனர் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஜெர்மனியின் Goethe பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தின் குழுக்கள், 450 க்கும் மேற்பட்ட வரலாற்றுப் பானைகளை ஆய்வு செய்தன. அவற்றில் 66 லிப்பிட்களின் தடயங்கள், அதாவது தண்ணீரில் கரையாத கொழுப்புகளின் தடயங்கள் இருந்தன. Goethe பல்கலைக்கழகத்தின் Nok ஆராய்ச்சி குழுவினர், பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தின் வேதியியலாளர்கள், எந்த தாவரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தபப்ட்டன என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் அவற்றின் லிப்பிட் சுயவிவரங்களை பிரித்தெடுத்தனர்.
ஆய்வாளர்களின் நிபுணத்துவம், தொல்பொருள் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் இணைந்து, இந்த தாவர வகைகள் மேற்கு ஆப்பிரிக்க உணவுகள் என்றும், இவை 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் உறுதிப்படுத்தினர்.
"தொல்பொருள் மட்பாண்டங்களில் பாதுகாக்கப்பட்ட விதைகள் மற்றும் கொட்டைகள் போன்ற கார்பனைஸ் செய்யப்பட்ட தாவர எச்சங்களின் முடிவுகள் மக்கள் சில நூற்றாண்டுகள் முன்பு என்ன சாப்பிட்டனர் என்பதன் ஒரு பகுதியை பிரதிபலிக்கின்றன" என்று கேத்தரினா நியூமன் கூறினார். அதுமட்டுமின்றி, மத்திய நைஜீரியாவில் இருந்து கார்பனைஸ் செய்யப்பட்ட தாவர எச்சங்களைப் பயன்படுத்தி, நோக் மக்கள் பனி வரகு அல்லது திணையை வளர்த்தார்கள் என்பதையும் கண்டறிய முடிந்துள்ளது.
இந்தத் தாவர வகைகள், சாஸ்கள், மசாலா, காய்கறிகள் மற்றும் மீன் அல்லது இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படுகின்றன. இந்தக் கீரைகள் மற்றும் இலைகள் மேற்கு ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் துருவப்பட்ட கிழங்குடனும் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் திணை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கஞ்சி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடப்பட்டன. கீரைகள் மற்றும் இலைகளுடன் மக்கள் மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் பயன்படுத்தினார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.