பிற பயணிகளின் நலனை கருதி, உட்கார இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை என நினைத்த மரிசா, கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டே அடுத்த 3 மணி நேர பயணத்தை கழித்திருக்கிருக்கிறார்.
விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் நடுவானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானதால், விமான டாய்லெட்டில் 3 மணி நேரம் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணி ஒருவருவருக்கு நடுவானில் கொரோனா அறிகுறிகள் தோன்றியதால், உடனடி பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கொரோனா பாசிட்டிவ் ஆனது தெரியவந்ததும், 3 மணி நேரம் கழிவறையில் தன்னை தனிமைப்படுத்தி விமான நிலையத்தை வந்தடைந்த விநோத சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக சிகாகோ நகரில் இருந்து ஐஸ்லாந்து சென்ற Icelandair விமானத்தில், மிச்சிகன் நகரைச் சேர்ந்த மரிசா ஃபோட்டியோ என்ற பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் பயணித்துள்ளனர். ஐஸ்லாந்து சென்று அங்கிருந்து வேறு ஒரு இணைப்பு விமானம் மூலம் அவர்கள் ஸ்விட்சர்லாந்தை அடைய திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் விமானம் புறப்பட்டு ஒன்றரை மணி நேரத்தை கடந்த பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, மரிசா ஃபோட்டியோவுக்கு தொண்டை கம்மியிருக்கிறது. சந்தேகமடைந்த அவர், தான் கையோடு எடுத்துச் சென்றிருந்த, உடனடியாக கொரோனா முடிவை அறிந்துகொள்ளும் ரேபிட் கொரோனா பரிசோதனை கிட்டை எடுத்துக் கொண்டு விமானத்தின் கழிவறைக்கு சென்று அங்கு சோதனை செய்து பார்த்தபோது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த போதிலும், சக பயணிகள் நலனை கருத்தில் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், விமான பணிப்பெண்ணிடம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதை சொல்லி, தனியாக ஏதும் சீட் காலியாக இருக்கிறதா என கேட்டுள்ளார். ஆனால் அன்று விமான இருக்கைகள் அனைத்தும் முழுமையாக பயணிகளால் நிரம்பியிருந்ததை அவரிடம் தெரிவித்தார் விமான சிப்பந்தி.
இருப்பினும் பிற பயணிகளின் நலனை கருதி, உட்கார இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை என நினைத்த மரிசா, கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டே அடுத்த 3 மணி நேர பயணத்தை கழித்திருக்கிருக்கிறார். அதே நேரத்தில் இந்த விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் 2 பிசிஆர் பரிசோதனைகளையும், 5 ரேபிட் பரிசோதனைகளையும் மரிசா மேற்கொண்டபோது அவருக்கு கோவிட் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆயினும், விமானப் பயணத்தில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் மரிசா பதற்றம் அடைந்துள்ளார்.
மரிசா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பதால் அவர் இவ்வாறு அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டு வருகிறார். மேலும் ஒரு கட்டத்தில் பயந்து போயிருந்த மரிசாவால் அழுகையை அடக்க முடியவில்லை.
ஐஸ்லாந்தை அந்த விமானம் அடைந்தவுடன், மரிசாவின் குடும்பத்தினர் தான் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கினர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், மரிசாவின் தந்தைக்கும், சகோதரருக்கும் நெகட்டிவ் வந்ததால், அவர்கள் இருவரும் இணைப்பு விமானம் மூலம் ஸ்விட்சர்லாந்து கிளம்பிச் சென்றனர். மரிசா தற்போது ஓட்டல் ஒன்றில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.
இச்சம்பவம் குறித்து விமான சிப்பந்தி கூறுகையில், இது போல ஒரு விஷயம் நடப்பது ஒருவித நெருக்கடியாகவே இருக்கிறது. இருப்பினும் எங்கள் பணியில் இது சகஜமானது என்றார்.