ஒமைக்ரானுக்கு எதிராக தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை - அமெரிக்க விஞ்ஞானி
16 Dec,2021
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற கொரோனா குறித்த விவாத நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுசி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக ஆற்றல் தரும், ஒமைக்ரானுக்கு என தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“2 டோஸ் பைசர் தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை தராவிட்டாலும், தீவிர நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு தருகின்றன.
தென் ஆப்பிரிக்காவில், ஒமைக்ரானுக்கு முன்னர் கொரோனா பதிப்பு ஏற்படாமல் 80 சதவீத பாதுகாப்பை அளித்த 2 டோஸ் தடுப்பூசிகளின் திறன் இப்போது 33 சதவீதமாக குறைந்துள்ளது
ஆனாலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கடுமையான பாதிப்பிலிருந்து 70 சதவீத பாதுக்காப்பை 2 டோஸ் தடுப்பூசிகள் தருகின்றன” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் ரோச்செல் வாலன்ஸ்கி கூறுகையில்,
“அமெரிக்காவில் 36 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய கொரோனா பாதிப்பில், 3 சதவீதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளில் இருக்கும் தற்போதைய கொரோனா பாதிப்பில் 13 சதவீதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
வரும் வாரங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு ரோச்செல் வாலன்ஸ்கி தெரிவித்தார்.