சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், இப்போது உலகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த ஒமைக்ரான் வைரஸால் எந்த ஒரு நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதன் அறிகுறிகள் டெல்டாவை விட குறைவாக இருப்பதாகவும், தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றல் முழுமையாக இல்லை, இது ஒரு ஆரம்ப கட்ட தகவல் என்று உலகசுகாதார அமைப்பு கூறியிருந்தது.
இதற்கிடயில், Pfizer-BioNTech நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் வைரஸை அழிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிங்கப்பூர் விமான நிலையத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவரைத் தொடர்ந்து, மற்றொரு நபர் ஜேர்மனி சென்று திரும்பியுள்ளார். அவருக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் இரண்டு பேருமே மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டிருந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், ஒமைக்ரான் தொற்று பரவும் வேகத்தை பார்க்கும் போது, சிங்கப்பூர் எல்லைகளில் கட்டுப்பாடுகளை பலப்படுத்த வேண்டும். ஏனெனில், அதிகமாக இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றாளர்கள் வரக்கூடும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அங்கிருக்கும் 87 சதவீத மக்கள் முழுமையாக இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அதே போன்று 28 சதவீதம் பேர் மூன்றாவது ,அதாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இங்கிருக்கும் மக்களுக்கு பைஸர் அல்லது மாடர்னா ஆகிய தடுப்பூசிகளே போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.