உலக பெண் ஆளுமை ஏஞ்சலா மெர்கல் - நிறைவு பெறும் சகாப்தம்
09 Dec,2021
ஜெர்மனியின் புதிய அதிபராக ஓலாஃப் ஸ்கொல்ஸ் நேற்று பதவியேற்ற நிலையில் கடந்த 16 ஆண்டுகாலம் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கல் பல்வேறு சாதனைகளுடன் அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காததால் அதிபர் பதவியை இழந்தார் ஏஞ்செலா மெர்கல். சோசியல் டெமாகிராட்ஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் நேற்று (டிச 8) புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் ஜெர்மனியில் கடந்த நவம்பர் 22, 2005ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று, 16 ஆண்டுகள் அதிபராக இருந்து மெர்கல் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ஜெர்மனியின் முதல் மற்றும் ஒரே பெண் அதிபராக திகழ்ந்த மெர்கல், விரைவில் முழு நேர அரசியலில் இருந்தும் விடைபெற இருக்கிறார்.
விஞ்ஞானியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஏஞ்செலா மெர்கலின் அரசியல் ஆசான் ஹெல்முட் கோஹ்ல். இவர் கிழக்கு - மேற்கு என இரண்டாக பிளவுபட்டிருந்த ஜெர்மனியை ஒன்றாக இணைத்தவர். இவரும் ஜெர்மனியின் அதிபராக 16 ஆண்டுகாலம் இருந்தவர். ஆனால் ஒப்பீட்டளவில் மெர்கலால், தனது ஆசானின் நீண்ட நெடிய அதிபர் சாதனையை முறியடிக்க முடியாமல் போயிருக்கிறது.
நீண்டகாலம் ஜெர்மன் அதிபராக திகழ்ந்த ஏஞ்செலா மெர்கல் தனது பதவிக்காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரான்ஸ் அதிபர்கள், 5 பிரிட்டிஷ் பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய அதிபர்களுடன் சமகாலத்தில் பணியாற்றியிருக்கிறார். மேலும் அதிபராவதற்கு முன், எதிர்கட்சித் தலைவராக 2000வது ஆண்டு தொடங்கி 2005 வரையிலும், தனது கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் தலைவராக 10 ஏப்ரல் 2000 தொடங்கி டிசம்பர் 7 2018 வரை 18 ஆண்டுகாலம் பதவியில் இருந்துள்ளார்.
2005ம் ஆண்டு மெர்கலை பலரும் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால் மெர்கல் தனது பதவிக்காலத்தில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார நெருக்கடி, அகதிகள் விவகாரம், உலக மந்தநிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகிய நான்கு பெரும் பிரச்னைகளை திறம்பட கையாண்டு புகழ் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் இதழின், ‘உலகின் சக்திவாய்ந்த பெண்மணி’ பட்டியலில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் மெர்கல் இடம்பிடித்து வந்தது இவரின் பலத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.
உலக அளவிலும் ஜெர்மனியின் உயர்ந்த தலைவர்களுள் ஒருவராக வரலாறாக மாறியிருக்கும் ஏஞ்செலா மெர்கல் பல்வேறு சாதைகளுடன் தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.