விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் அளித்த பெண் -
03 Dec,2021
விமானத்தில் பூனைக்கு பெண் ஒருவர் தாய்ப்பால் அளித்த நிலையில், இதற்கு விமான பணிப்பெண்களும், சக பயணிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதும், கண்டுகொள்ளாமல் அந்தப் பெண் தாய்ப்பால் அளித்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
செல்லப்பிராணி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் தாங்கள் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போலவும், சிலர் அதற்கு மேலானதாகவும் பாவித்து வளர்த்து வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வளர்ப்பவருக்கு தான் அது செல்லப்பிராணியே தவிர அருகாமையில் இருப்போரும் அது ஒரு ஜீவராசி தான். இதனாலேயே சில நேரங்களில் செல்லப்பிராணி வளர்ப்போருக்கும், பிறருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதுண்டு.
அந்த வகையில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், தான் ஆசையாக வளர்த்து வரும் பூனைக்கு தாய்ப்பால் அளித்தது அருகில் இருந்தோர் மட்டுமல்லாது விமான நிறுவன பணியாளர்களுக்குமே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிற்கு பயணமாகியது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென தான் துணியில் மூடி வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கியிருக்கிறார். அந்தப் பெண்ணின் செயலால் பூனை ஆக்ரோஷமாக கத்தியிருக்கிறது.
பூனையின் சத்தம் அதிகரித்ததால் அதிருப்தியடைந்த சக பயணிகள் தாய்பால் கொடுக்க வேண்டாம் என அப்பெண்ணிடம் கூறியிருக்கின்றனர். இருப்பினும் பயணிகளின் பேச்சை மதிக்காத அப்பெண் தனது செயலை தொடரவே, பயணிகள் விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தனர். விமான பணிப்பெண்கள் வந்து பால் கொடுக்க வேண்டாம் என தெரிவித்த போதிலும் அந்தப் பெண் மதிக்காமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து விமானிகளிடம் இது குறித்து கூறப்பட்டது. விமானிகள், தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் Aircraft Communications Addressing and Reporting System (ACARS) முறையில் பெண்ணின் செயல் குறித்து புகார் அளித்திருக்கின்றனர். அந்த விமானம் அட்லாண்டா விமான நிலையத்தை அடைந்தபின்னர் அந்த பெண்மணி தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
ஒரு பூனை விஷயத்திற்காக விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் புகார் தெரிவித்த விவகாரம் வியப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் விமானத்தில் அந்த பெண், முடியில்லாத பூனையை துணியால் சுற்றிவைத்திருந்தது ஒரு குழந்தை போல சக பயணிகளுக்கு தெரிந்ததாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.