736 மில்லியன் பெண்கள் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பாலியல் வன்கொடுமைக்கு
26 Nov,2021
ஆளாகின்றனர் - ஐநா சபை வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
பெண்களுக்கு இந்த உலகில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலை தான் ஏற்பட்டு வருகிறது. காலங்கள் மாற மாற பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அதிகமாகி கொண்டே போகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதி உலக அளவில் பெண்களின் மீது நடத்தப்படும் வன்புணர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக பெண்களின் மீது நடத்தப்படும் குற்றங்கள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்த கொரோனா காலங்களின் இதன் சதவீதம் மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பு (United Nations Women) குறிப்பிடுகிறது. இந்த அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் உலகளவில் சுமார் 736 மில்லியன் பெண்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது உடல் ரீதியாகவும் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கும் ஆளாகி வருவதாக கூறுகின்றனர். இவற்றில் பல குற்றங்கள் அவர்களது கணவன் அல்லது துணையினால் ஏற்படுபவை என்று இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
இது போன்று பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் வீடுகளில் மட்டுமன்றி, அலுவலகங்கள் முதல் தெருக்கள் வரையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா காலங்களில் பல நாடுகளில் குடும்ப வன்முறை காரணமாக அவசரகால உதவி எண்களை அணுகி உள்ளனர். யுனைடெட் கிங்டமில் குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வு குற்றங்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று உதவி எண்களின் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலும் குடும்ப வன்முறை குற்றங்கள் முன்பை காட்டிலும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 2,960 குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 5,297 குற்றங்களாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் மட்டுமே சுமார் 1,463 குற்றங்கள் பதிவாகியுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்டு வரும் இது போன்ற குற்றங்களை தடுக்க 52 நாடுகள் ஒருங்கிணைந்து செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது என்று ஐநா சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் 121 நாடுகள் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகளை செய்து வருகிறது.
தொழில்நுட்ப உலகின் சாம்பவான்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக், பெண்களின் மீது நடத்தப்பட்டு வரும் குடும்ப வன்முறைகளை தடுக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. "Ad Grants Crisis Relief Program" என்கிற திட்டத்தின் மூலம் விளம்பரங்களில் பெரும் பணத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐநா சபைக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்களித்து வருகிறது.
பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றங்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் அரசாங்க உதவி எண்கள் உள்ளன. அவசர நிலை முதல் சாதாரண குற்றங்கள் வரை இதற்கான உதவி எண்கள் இந்தியாவில் உள்ளன. இந்த உதவி எண்களின் மூலம் நேரடியாக அந்த குற்றசாட்டை காவல் நிலையம், மருத்துவமனை, மாவட்ட சட்ட சேவை ஆணையம், உளவியல் சேவைகள் போன்றவற்றிற்கு தெரியப்படுத்துவார்கள். இதனால் உடனடி நடவடிக்கை எடுப்படும்.