18 முறை கத்தியால் சரமாரியாக குத்திய சைக்கோ காதலன்
12 Nov,2021
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தன்னை திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் 18 முறை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தௌலதாபாத்தைச் சேர்ந்த இளம் பெண் சிரிஷா, அப்பகுதியைச் சேர்ந்த பசவராஜ் என்ற இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இருப்பினும், திருமணம் செய்து கொள்ள மறுத்த சிரிஷா, பசவராஜ் உடனான தனது காதலையும் முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த இளம் பெண்ணுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தெரிந்து கொண்டதும் ஆத்திரமடைந்த பசவராஜ், ஹஸ்தினாபுரத்தில் வசித்து வரும் சிரிஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணிடம் பசவராஜ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு சிரிஷா மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை 18 முறை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
சிரிஷாவின் கூச்சல் சத்தம் கேட்டு ரூமிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அப்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இளம் பெண்ணை 18 முறை கத்தியால் குத்திய பசவராஜை அப்பகுதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.