தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தை சேர்ந்த பீனா என்ற பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் ஆதிரா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். பீனா, தன் மகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்றிருக்கிறார்.
ஆதிரா, அஜி என்ற அவரின் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, அஜியின் குடும்பத்தினர் வெளியில் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் ஆதிரா, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின்பு, ஆதிரா தற்கொலை செய்துகொண்டது தொடர்பில் அவர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் பீனா, இதனை அறிந்து கதறி துடித்தார். அதன்பின்பு, ஆதிராவின் செல்போனை காவல்துறையினர் சோதனை செய்த போது, அவர் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபரிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, ஆதிரா, கேரளாவில் உள்ள திருச்சூரில் வசிக்கும் அஜய் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்நிலையில், ஆதிராவின் புகைப்படத்தை அஜய் மார்ஃபிங் செய்து அனுப்பியிருக்கிறார்.
இதனால் அதிர்ந்துபோன ஆதிரா, அஜய்யுடன் சண்டையிட்டு அந்தப் புகைப்படத்தை அழிக்குமாறு கூறியிருக்கிறார். அதற்கு அஜய், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அழிப்பேன் இல்லையெனில், அந்தப் படத்தை இணையதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
மேலும், ஆதிராவின் தாயாரான பீனாவின் தொலைபேசிக்கும் அந்தப் புகைப்படத்தை அஜய் அனுப்பியிருக்கிறார். எனவே ஆதிரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ளார். எனினும், அஜய் தொடர்ந்து ஆதிராவிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
அஜய்யின் பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இதனால், மன வேதனை அடைந்த ஆதிரா தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை நடத்தி வருவதாகவும், அஜயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பீனா, வெளிநாட்டிலிருந்து நேற்று குமரி வந்தடைந்தார். அவர், தன் மகளின் உடலை பார்த்து அழுது துடித்தது, காண்போரின் மனதை நொறுக்கியது.