செவ்வாய் மற்றும் வியாழன் கோள் வரையிலான முக்கிய பகுதியில் உலவும் சிறுகோள்கள் பொதுவாக அவற்றின் உருவத்தை மாற்றிக்கொள்வதில்லை. ஆனால், 2005 QN173 என பெயரிடப்பட்ட இந்த மர்ம பொருள் தூசியை கக்கியவாறே பயணித்துக் கொண்டிருக்கிறது.
7.20 லட்சம் கிமீ நீள வாலுடன் கூடிய அரிய மற்றும் தனித்துவமான மர்ம பொருள் ஒன்று பால்வீதி மண்டலத்தில் உலாவி வருவதை வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 2005 QN173 என அந்த மர்ம பொருளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பால்வீதி மண்டலத்தில் எண்ணிடலடங்காத சிறு கோள்களும், மர்ம பொருட்களும் உலவி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே. வானியல் ரகசியங்கள் இன்னமும் மனித அறிவுக்கு எட்டாதவையாக இருக்கிறது.
பால்வீதியில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள் வரையிலான சிறுகோள்கள் உலவும் முக்கிய பகுதியில் ஒரு அரிதான பொருள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்ம பொருள் சிறுகோள் அல்லது ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம் என கூறுகிறார்கள். முக்கிய சிறுகோள்கள் உலவும் பகுதியில் இது வரை கண்டறியப்பட்டுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுகோள்களில் இதுவும் ஒன்று. மேலும் இப்பொருள் ஒரு முறை மட்டுமே ஆக்டிவாக இருந்துள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய் மற்றும் வியாழன் கோள் வரையிலான முக்கிய பகுதியில் உலவும் சிறுகோள்கள் பொதுவாக அவற்றின் உருவத்தை மாற்றிக்கொள்வதில்லை. ஆனால், 2005 QN173 என பெயரிடப்பட்ட இந்த மர்ம பொருள் தூசியை கக்கியவாறே பயணித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் வால் பகுதி சுமார் 7.20 லட்சம் கிமீ தொலைவுக்கு இருப்பதாகவும், அது ஐஸ் போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கலாம், அந்த மர்ம பொருள் ஆக்டிவ் ஆகும் போது ஆவியாகலாம் எனவும் கூறினர்.
Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) சர்வேயின்படி, இந்த மர்ம பொருள் கடந்த ஜுலை மாதம் ஆக்டிவ் ஆக செயல்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கிரக அறிவியலுக்கான அமெரிக்க வானியல் சங்கத்தின் பிரிவின் 53வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வில், அறிஞரான ஹென்ரி ஹ்சே இது ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
2005 QN173 என்றால் என்ன?
2005 QN173 முதன் முதலில் 2005ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது 3.2 கிமீ தடிமன் கொண்ட தூசி மேகங்களால் ஆனது. மேலும் பிற சிறுகோள்களின் குணாதிசயத்தை பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாத ஆய்வின்படி இந்த சிறுகோளின் வால் போன்ற பகுதியின் நீளம் சுமார் 7.20 லட்சம் கிமீருக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது பூமியில் இருந்து நிலவுக்கு இரண்டு முறை சென்று திரும்பும் தூரம் இதுவாகும். மேலும் இந்த சிறுகோளின் அகலம் 1400 கிமீ ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறுகோள் ஏன் தனித்துவமானது?
பொதுவாக முக்கிய வழித்தடத்தில் இருக்கும் கோள்கள் சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உஷ்னம் காரணமாக தங்களது ஐஸ் படல தன்மையை இழந்துவிட்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் 2005 QN173 சிறுகோளானது நகரும் போது தூசியையும், ஐஸ்-ஐயும் முக்கிய வழித்தடத்தில் வெளியேற்றி வருகிறது. எனவே தான் 2005 QN173 சிறுகோள் தனித்துவமாக விளங்குவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த சிறுகோள் குறித்த ஆராய்ச்சிகள் தொடரும் போது பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான மேலும் பல விவரங்கள் வெளியாகும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.