மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்... கின்னஸ் சாதனை படைத்த யோகா மாஸ்டர் கைது
07 Oct,2021
யோகா பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல யோக பயிற்சியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபல யோகப் பயிற்சியாளர் 45 வயதான யோகராஜ் என்ற பூவேந்திரன் சிதம்பரம். இவர் கடந்த 2015ம் ஆண்டு, ஹாங்காங்கில் தொடர்ந்து 40 மணிநேரம் யோகாப் பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்காக பிரதமர் மோடி, அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் யோகராஜுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த 21 வயதான மருத்துவத் துறையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், யோகராஜ் மீது, மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 6 மாதங்களாக, தான் அவரிடம் யோகா பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, பார்ட்னர் யோகா என்ற பெயரில் யோகராஜ், தனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டுப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் தொடர்ந்து, தன்னைக் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யோகராஜ் தனது பிறந்தநாள் என்று கூறி, வீட்டுக்கு அழைத்ததாகவும், அன்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார் மேலும் பாலியல் பலாத்காரத்தை வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து தன்னை மிரட்டி வந்ததாகவும்குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் மட்டுமல்லாது பல பெண்களிடம் இது போன்று யோகராஜ் தவறாக நடந்து கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ வாட்ஸப் சாட் ஆதாரங்களை போலீசாரிடம் புகாருடன் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீஸார், யோகராஜை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் குற்றம் உறுதியானதால், பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் செல்போனைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பல பெண்களிடம் யோகராஜ் தவறாக நடந்துள்ளாதாக புகாரில் குறிப்பிட்டிருப்பதால் அவரைக் காவல் விசாரணையில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்