அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பாற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, 6.5 மில்லியன் டொலர்களைப் இமாட் சுபேரி பெற்றிருக்கிறார் என்ற விபரம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிதி இலங்கைக்கு ‘நல்ல பிள்ளை’ என்று பெயர் எடுத்துக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டதா அல்லது, அமெரிக்க அரசின் உயர்மட்டத்தினரை வளைத்துப் போடுவதற்காக பரிமாறப்பட்டதா?
இமாட் சுபேரிக்கு (Imaad Zuberi)
பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட அமெரிக்கரான, இமாட் சுபேரிக்கு (Imaad Zuberi) அமெரிக்க நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போது, அவருக்கு இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்புகள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (The Wall Street Journal) கடந்த வெளியிட்ட கட்டுரை ஒன்றே அவருக்காக, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கோடிகோடியாக பணத்தைக் வாரி இறைத்த விடயம் அம்பலத்துக்கு வந்தது.
தொழில்துறை வல்லுநராக, பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டன் போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது பிரதான நிதி திரட்டுநராக, பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் தான் இமாட் சுபேரி.
பிரசார விதிமீறல்கள், நிதி சேகரிப்புகளின் போது வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்தே அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இமாட் சுபேரி அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரைப் பாதுகாப்பாற்கான ஒப்பந்தம் ஒன்றுக்காக, 6.5 மில்லியன் டொலர்களைப் அதாவது 131 கோடி ரூபாவை பெற்றிருக்கிறார் என்ற விபரம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த நிதி, இலங்கை மத்திய வங்கியினால், 2014ஆம் ஆண்டில், இமாட் சுபேரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்போது மத்திய வங்கியின் ஆளுனராக இருந்தவர் தற்போதைய நிதி மற்றும் முதலீட்டுச்சந்தை மற்றும் தொழில்துறை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக உள்ள அஜித் நிவாட்கப்ரால்.
இந்த நிதி கொடுக்கப்பட்டதற்கு அமைச்சரவையினரதோ, பாராளுமன்றத்தினதோ அனுமதி பெறபட்டிருக்கவில்லை.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களை கொண்டுவந்து – மனிதவுரிமை விவகாரத்தில் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான், இந்த நிதி பரிமாறப்பட்டிருக்கிறது.
இந்த நிதி வெறுமனே, இலங்கைக்கு ‘நல்ல பிள்ளை’ என்று பெயர் எடுத்துக்கொடுப்பதற்காக வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்க அரசின் உயர்மட்டத்தினரை வளைத்து போடுவதற்கா பரிமாறப்பட்டது என்று தெரியவில்லை..
இந்தளவு பெரிய தொகையை இலங்கை அரசாங்கம் நாட்டின் பெயரை காப்பாற்றுவதற்காக மாத்திரம் செலவிடப்பட்டது என்று நம்புவது கடினமான விடயம்.
நாடுகள், நிறுவனங்கள் தமக்கு நற்பெயரை உருவாக்கிக்கொள்வதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும், பிரச்சாரக்குழுகளை, அமைப்புகளை, தனிநபர்களை பயன்படுத்துவது வழக்கம்.
அவ்வாறுதான் இமாட் சுபேரிக்கும் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் இந்த நிதியை வெளிப்படைதன்மையுடன் வழங்கியிருக்கவில்லை.
அதுமாத்திமின்றி, இமாட் சுபேரி அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் முகவர் என்பதனையும் இலங்கை அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மாத்திரமன்றி, கடல்சார் கண்காணிப்பு பொறிமுறை (martime suveillance sytem) ஒன்றையும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியை கண்காணிக்க கூடிய திறன்கொண்டது அந்த கண்காணிப்பு பொறிமுறை.
சீன நீர் மூழ்கி கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்ட விவகாரத்தினால், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் எரிச்சலுடன் இருந்த காலமது அது.
அந்த நேரத்தில் இலங்கைக்கு அந்தக் கண்காணிப்பு பொறிமுறையை அமெரிக்கா தயாராக இருக்கவில்லை.
அதேவேளை 131 கோடி ரூபாய் செலவிட்டும் அமெரிக்காவில் இலங்கையின் பெயரை காப்பாற்றமுடியாமல் போனதுதான் பரிதாபம்.
அவ்வாறு இலங்கையின் பெயர் காப்பாற்றபட்டிருந்தால், 2015 ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்காவும் காரணம் என்ற குற்றச்சாட்டை ராஜபக்சவினர் சுமத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்காது.
சர்வதேச அளவில் பல சந்தர்பங்கங்களில் இவ்வாறான ஏமாற்றங்களை இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி விடுதலைப்புலிகளும் கூட சந்தித்திருக்கிறார்கள்.
2006 ஆம் ஆண்டில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து ரஸ்யாவின் எஸ்.ஏ.18 எனப்படும் சாம் ஏவுகணைகளையும் ஏ.கே. போட்டி துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா, கனடாவில் இருந்த சில தமிழர்கள் முயற்சி செய்தனர்.
விடுதலைப்புலிகளுக்காகவே அந்த ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவராக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் நீக்கப்பட்ட பின்னர், அனுபவமில்லாத புலம்பெயர் தமிழர்களை கொண்டு அந்த ஆயுதக் கொள்வனவு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆயுத முகவர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு, விமான எதிர்பு ஏவுகணைகளையும் துப்பாக்கிகளையும் வாங்குவதற்கு சென்றபோது 13பேர் எப்.பி.ஐ புலனாய்வு பிரிவினரிடம் அகப்பட்டுக்கொண்டனர்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டதாக கைதுசெய்யப்பட்டவர்கள் பலருக்கு 25,26,14 வருடங்கள் என்று சிறைத்தண்டனை விதிக்கபட்டது. அவாகள் இன்னும் சிறைகளிலேயே இருக்கின்றனர்.
அதுபோல, போரின் இறுதிக்கட்டத்தில், ஆயுதங்களை விமானம் ஒன்றில் ஏற்றி, வன்னிக்கு அனுப்புவதாக கூறி உக்ரேனிய ஆயுத முகவர் ஒருவரும் விடுதலைப் புலிகளை ஏமாற்றியிருந்தார்.
சர்வதேச மட்டத்தில் ஆயுதக் கொள்வனவுகளின் போது இவ்வாறான ஏமாற்றுதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரணம்.
போலி முகவர்களும் இருப்பார்கள். புலனாய்வு முகவர்களும், மோப்பம் பிடித்து திரிவார்கள். அமெரிக்காவில் இமாட் சுபேரியிடம் இலங்கை அரசாங்கம் ஏமாந்தது போன்று, 1997ஆம் ஆண்டிலும் ஒரு சம்பவம் இடம்பெற்றது.
சிம்பாப்வேயில் இருந்து, 32,400, 81 மி.மீ மோட்டார் குண்டுகளை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்தது.
இஸ்ரேலிய ஆயுத முகவர் ஒருவர் மூலமாகவே, இந்த மோட்டார் குண்டுகள் வாங்கப்பட்டன. அவற்றை எம்.வி.ஸ்ரில்லஸ் லிமுசுல் என்ற கப்பலில் ஏற்றி அனுப்பியதாக அந்த முகவர் அறிவித்திருந்தார்.
ஏ9 வீதியைக் கைப்பற்றுவதற்கான ஒப்பரேசன் ஜயசிக்குறு சமர் நடந்து கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில், மோட்டார் குண்டுகளுக்காக காத்திருந்த போதும், அவை கொழும்பை வந்து சேரவில்லை.
அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அதிகளவில் 81 மி.மீ மோட்டார் குண்டுகளை அதிகளவில் களமுனையில் பயன்படுத்தியிருந்தார்கள்.
அதனால், விடுதலைப் புலிகளே, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, வேறு கப்பலில் அந்த மோட்டார் குண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர் என்று கருதப்பட்டது.
ஆனாலும், அந்த மோட்டார் குண்டுகள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவில்லை என்றும், இலங்கை அரசின் முகவர்களே ஆயுதமுகவர்களிடம் ஏமாந்து போயினர்.
அதனை மறைக்கவே புலிகளின் மீது பழியைப் போட்டு, அவர்களை சர்வதேசகடத்தல்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் என்றும், பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம், மீண்டும் அதேபோன்று அமெரிக்க புலனாய்வு முகவரிடம், அமெரிக்காவில் தமது பெயரைக் காப்பாற்றுவதற்காக பெருமளவு நிதியை செலவிட்டு, ஏமாந்திருக்கிறது.
இதுபோல வேறும் பல இரகசிய பேரங்கள் நடந்திருக்கலாம். காலப்போக்கில் அவையும் அம்பலத்துக்கு வரக் கூடும்.