திருகோணமலையில் அமெரிக்காவிற்குப் பெரிய அளவிலான நிலப்பரப்பு வழங்கப்பட்டுவிட்டது, அங்கு அமெரிக்கத் தளம் உருவாக்கப்படுகிறது எனக் கடந்த மாதம் முழுவதும் பலதரப்பட்ட செய்திகளை சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் தத்தம் அறிவுசார் நிலையிலிருந்து வெளியிட்டன.
இந்தப் பின்னணியில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கின்ற கொதிநிலையும், இந்தியா – அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான அரசியல், இராணுவ, பொருளியல் பலப்பரீட்சையில் இலங்கைத் தீவு பரீட்சைக் களமாக மாறியிருக்கிறது.
அந்தப் பரீட்சை களத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை முக்கிய புள்ளியாக உருப்பெறத் தொடங்கிவிட்டது என கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுயைில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறித்த கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
திருகோணமலையில் அமெரிக்காவுக்கு ஒரு துண்டு நிலப்பரப்பையேனும் இந்த நிமிடம் வரை இலங்கை அரசு வழங்கவில்லை என்பதுதான் உண்மையானது. ஆனால் அதற்கான பேரம் பேசல் இடம்பெற்றிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இன்றைய இந்தோ – பசுபிக் பிராந்திய கொதிநிலையில் இலங்கை தீவில் ஒரு தளம் அமெரிக்காவுக்குத் தேவையாகவுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு வலையத்தினுள் உள்ள ஒரு புள்ளியாகவே இலங்கைத் தீவு எப்போதுமுள்ளது. அத்தகைய இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து தாவிப் பாய்ந்து வெளியே நிற்பதோடு மாத்திரமல்ல அது சீனாவுடன் கூட்டுச்சேர்ந்தும் நிற்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு வலையத்துக்குள் இருக்கக்கூடிய இலங்கைத் தீவினுள்ளே இன்னுமொரு வல்லரசு வந்து நிலைகொள்வதை இந்தியாவினால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்பது கவனத்துக்குரியது. ஏனைய நாடுகளுக்கு இந்து சமுத்திரமானது உலகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சமுத்திரங்களில் ஒன்று மட்டுமே.
ஆனால் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம்தான் அதன் உயிர்நாடியாகும். இந்தியாவின் உயிர் வாழ்வும், சுதந்திரமும் இந்நீர்ப்பரப்பின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.
இந்து சமுத்திர நீர்ப்பரப்பு பாதுகாக்கப்படாமல் இந்தியாவிற்குத் தொழில் விருத்தியுமில்லை, வர்த்தக வளர்ச்சியுமில்லை, ஸ்திரமான அரசியல் அடித்தளமுமில்லை என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்.பணிக்கர் குறிப்பிட்டது எக்காலத்திற்கும் இந்தியாவுக்குப் பொருத்தமானதே.
இந்தோ – பசுபிக் கடற் பிராந்தியத்தில் மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி இன்று உச்சம் பெற்றுவிட்டது.
இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள இலங்கைத்தீவும், இந்தியாவும் இந்த அதிகாரப் போட்டியில் முக்கிய கேந்திர ஸ்தானத்தில் உள்ளன.
எனவே வரலாற்று ரீதியாக இந்தோ – பசுபிக் பிராந்திய கடலாதிக்க வலுச்சமநிலையையும் அதன் பின்னணியையும் நோக்குவது அவசியமானது. உலகின் முதலாவது கடலாதிக்கப் பேரரசு சோழப் பேரரசாகும்.
10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து – பசுபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும் (தமிழன் கடல்), தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அரேபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர் கணங்களும் (வர்த்தக கம்பனிகள்) ஏக செல்வாக்குச் செலுத்தின.
சோழர்கள்தான் முதன் முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீ விஜயா சாம்பிராஜ்சம் என்ற ஒரு அரசை ஸ்தாபித்தார்கள்.
இதன்மூலம் கடல்கடந்து பேரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாகச் செய்து காட்டியவர்கள் சோழர்கள். உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே.
சோழர்களின் கடல் வீரர்களைச் சுமந்துகொண்டு தொடராக இந்தோ – பசுபிக் கடலில் உலாவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர்.
இன்று ஆங்கிலத்தில் கடற்படைக்கு நேவி (NAVY) என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியது.
சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா இந்தோ – பசுபிக் கோட்பாடு என தமது நலன்சார்ந்து மீண்டும் புது வடிவம் கொடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கைதான் இன்றை நவீன இந்தியாவுக்குப் பொருத்தமானது.
இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு, மேற்கு கடற்கரை முழுவதும் சோழர் கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியூகத்தில் இணைவது புரியும்.
சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி அடைகின்றபோது 13ம் நூற்றாண்டுக்குப் பின்னர் 14ம்,15ம் ஆம் நூற்றாண்டு வரை அரேபியர்களின் கைகளில் இந்து சமுத்திர ஆதிக்கம் சென்றது.
அவர்கள் தமிழன் கடலான வங்கக் கடலை கடந்து தென்கிழக்காசிய வரை வர்த்தகம் செய்து ஆதிக்கம் செலுத்தியதோடு மாத்திரமல்ல தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகளைக் கட்டமைப்புச் செய்துவிட்டார்கள்.
சோழர்களாகிய தென்னிந்தியர்களின் கடல் வலிமை குன்றியபோது இத்தகைய பெரும் மாற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சோழர்களின் கடற்படையும், கடற்கொள்கையும் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இருந்திருக்காது. 15ம் நூற்றாண்டில் சீனர்கள் இந்தியப்பெருங்கடலில் பெரும் கடற்படையுடன் உள்நுழையத் தொடங்கினர்.
இந்து சமுத்திரத்தில் இலகைத்தீவிற்கு கி.பி 1407-1419 களில் நான்கு தடவைகள் சீன கடற்படைத்தளபதி அட்மிரல் ஷென் – ஹி (Admiral Zheng-he) 440 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாரிய 62 கப்பல்களில் 37000 சீன வீரர்களுடன் வந்தான்.
இலங்கைத்தீவில் முதலாவது துப்பாக்கி பிரயோகத்தைச் செய்தவனும் ஷென் -ஹிதான். அவன் கொழும்பு கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றி (1409-1411) மூன்று ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டு சென்று விட்டான்.
16ம் நூற்றாண்டில் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும்,தொடர்ந்து ஆங்கிலேயரும் இந்து சமுத்திரத்தினுள் நுழைந்து இப்பிராந்திய நாடுகளை தமது காலனிய ஏகாதிபத்தியத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுர்ச்சி பெற்ற நெப்போலியன் இலங்கைத்தீவின் திருகோணமலையைக் கைப்பற்றிவிட்டால் இந்த உலகை நான் ஆழ்வேன் எனக் குறிப்பிட்டமை திருகோணமலையின் உலகளாவிய முக்கியத்துவமும் கேந்திர ஸ்தானமும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
ஆனால் இன்று 600 ஆண்டுகளின் பின் சீனா மீண்டும் தனது ஆளுகையை இலங்கைமீதும், இந்து சமுத்திரத்தின் மீதும் செலுத்த முற்படுகிறது. 1965ஆம் ஆண்டிலிருந்து இந்து சமுத்திரத்தின் தென் பகுதியிலுள்ள டியாக்காகோசியா தீவில் உள்ள அமெரிக்கத் தளத்திலிருந்து இந்து சமுத்திரத்தை முழுமையாக அமெரிக்காவினால் கண்காணிக்கக் கூடிய இருந்தது.
ஆனால் இன்று இந்து சமுத்திரத்தின் வடபகுதியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம், மியார்மாவின் கொக்கோ தீவிலும் சீனா நிலைகொண்டுவிட்டது.
இதனால் இந்து சமுத்திரத்தின் பிரதான வர்த்தக பாதைகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தற்போது அமெரிக்காவிற்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சீனா கால்பதித்து விட்டது. சீனாவை அகற்றுவதற்குரிய இலகுவான வழிகள் ஈழத்தமிழர் மூலமாக உள்ளன.
14 நூற்றாண்டில் இலங்கை தீவின் பெரும்பகுதிக் கடற்கரையோரத்தில் தமிழர்கள்தான் பெரிதும் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு கடற்கரையோரமாகவுள்ள காலி தொடக்கம் புத்தளம் வாரையான கடற்கரையோரத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக இன்று மாறிவிட்டனர். இன்று சிங்கள சமுகத்தில் காணப்படும். கரவா, சலாகம, துரவ, பரைய சாதியினர் 14ம் நுாற்றாண்டின்பின் சிங்களவராக மாற்றப்பட்டுவிட்டனர்.