. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி.. கொலையா?
23 Aug,2021
பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (52) – வளர்மதி (45). இவர்களது மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18) கல்லூரிகளில் படித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பழனி தீயணைப்பு படையினருக்கு மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாக வத்த கவுண்டன் வலசு கிராமத்திற்குச் சென்ற பழனி தீயணைப்புத் துறையினர், அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றபோது மக்காச்சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நிலையில் இருந்தது சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்படியிருக்க திடீரென மக்காச்சோள தட்டைக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் தற்போது பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இது குறித்து தென் மண்டல ஐஜி அன்பு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கடன் பிரச்சினை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இச்சம்பவம் தற்கொலையா? அல்லது இவர்களை யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.