ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் நினைவாற்றலை இழந்த பிரித்தானியர்: அதிர்ச்சி தகவல்!
20 Jul,2021
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர் ஒருவர் தமது நினைவாற்றலை இழந்ததுடன், பேச்சு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வேலையை விட்டுவிட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 32 வயது ஜோசப் ராபின்சன் என்பவரே ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் வேலையை விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்.
இவருடன் தற்போது 145 பிரித்தானியர்கள் தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.
பிப்ரவரி மாதம் தமது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் ஜோசப் ராபின்சன். அதன் பிறகு ஏற்பட்ட பக்கவிளைவுகளால் தற்போது தமது மகளுக்காக ஒரு கதை வாசிக்க கூட தம்மால் முடியாமல் போயுள்ளது என்கிறார்.
மட்டுமின்றி மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால், நினைவாற்றலை இழந்ததுடன் பேச்சு குறைபாடும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் மிக தீவிர பக்கவிளைவுகள் அரிதானவையே என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், இதுவரை பிரித்தானியாவில் 40 மில்லியன் ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரத்தக்கட்டிகள் தொடர்பில் 400 பேர்கள் மட்டுமே புகார் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் அரசிடம் இருந்து தங்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, பக்கவிளைவுகளுடன் வாழ தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளதாக ஜோசப் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 145 பேர்கள் தற்போது VDPS (Vaccines Damage Payment Scheme) முறையில் தங்களுக்கு இழப்பீடாக தலா 120,000 பவுண்டுகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றே அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.