விண்வெளி சுற்றுலா குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த வரலாறு படைக்கப்பட இருக்கிறது. Virgin Group தலைவரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 11 பேர் இன்று அவருடைய Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் VSS Unity விண்வெளி ஓடம் மூலமாக இன்று நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு பயணத்தை துவங்க இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் இந்த விண்வெளி பயணம் தொடங்க இருக்கிறது.
2000ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தான் முதலில் விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதும் அவருடைய கனவாக இருந்தது. இந்த கனவை அவருடைய புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக நிறைவேற்ற இருக்கிறார். ஜூலை 20ம் தேதி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செல்ல இருக்கிறார். இருப்பினும் பெசோஸுக்கு பின்னர் 2004ம் ஆண்டு விண்வெளி நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன் இன்றைய பயணத்தின் மூலம் விண்வெளி பந்தயத்தில் முந்தியிருக்கிறார்.
புதிய வரலாறு படைக்க இருக்கும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்று அவரே ஒரு சுவாரஸ்ய தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
2019ம் ஆண்டு டிசம்பரில், மும்பைக்கு வருகை தந்த ரிச்சர்ட் பிரான்சன், அவருடைய Virgin Atlantic நிறுவனத்தின் சார்பில் மும்பையிலிருந்து, லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டி.என்.ஏ சோதனையின் மூலம் என்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டதாக கூறினார்.
“எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் எங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை. 1793 ஆம் ஆண்டு முதல், எங்களது நான்கு தலைமுறைகள் இங்கு கடலூரில் வாழ்ந்திருக்கின்றனர், என் பெரிய, பெரிய, பெரிய பாட்டிகளில் ஒருவரான ஆரியா என்ற இந்திய பெண், என் பெரிய, பெரிய, பெரிய தாத்தாக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்,
உமிழ்நீர் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளின் மூலம் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது” என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
மேலும், Aria என்ற அவரது மூதாதையரின் ( பெரிய பாட்டி) படம் ஒன்றை Virgin Atlantic நிறுவனத்தின் ஐகான் ஆக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பை நிகழ்ச்சியில் பேசும் போது, ஒவ்வொரு முறை இந்தியரை காண்கிற போதும், நீங்கள் என் உறவினராக இருக்கலாம் என அவர்களிடம் கூறுவேன் என ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்தார்.
இதனிடையே ரிச்சர்ட் பிரான்சனின் 11 பேர் கொண்ட விண்வெளி பயணக் குழுவில் தற்செயலாக இந்திய வம்சாவளி பெ/ண்ணான சிரிஷா பந்த்லா என்பவரும் இடம்பெற்றிருக்கிறார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்து டெக்சாஸின் ஹூஸ்டனில் வளர்ந்த பந்த்லா, ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் டூ யூனிட்டியில் உள்ள 11 பேருடன் சேர்ந்து விண்வெளியின் விளிம்பிற்கு ஒரு பயணத்தை இன்று மேற்கொள்வார்.
இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்-க்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் 3வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சிரிஷா பந்த்லா.