பெண் என்ற ஒரு இனம் தெரியாமலே 41 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த 41 வயது நபர் ஒருவர் உண்மையில் ஒரு டார்ஜானாகவே வர்ணிக்கப்படுகிறார்.
வியட்நாமைச் சேர்ந்த Ho Van Lang-ன் குடும்பம் வியட்நாம் போருக்கு முன் வரை சாதாரண மனித வாழ்க்கையே வாழ்ந்து வந்தது. 1972ம் ஆண்டு வியட்நாம் போரின் போது அமெரிக்கா வீசிய ஒரு குண்டு Ho Van Lang-ன் தாய் மற்றும் இரு சகோதரர்களை கொன்றுவிட்டது. அந்த அதிர்ச்சியில் Ho Van Lang, அவருடைய தந்தை மற்றும் Tri என்ற சகோதரர் என மூன்று பேரும் Quang Ngai மாகாணத்தில் உள்ள Tay Tra மாவட்டத்தில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்றனர், அவர்கள் மூவரும் அங்கேயே வாழத் தொடங்கினர்.
அதன் பின்னர் அவர்கள் நகர, கிராமப் பகுதிகளுக்கு திரும்பவே இல்லை, போர் நடந்து கொண்டிருக்கிறது என்றே Lang-ன் தந்தை கருதியதால் அவர்கள் அங்கிருந்து வெளியே வரவே இல்லை. மலைத்தேன், காட்டு விலங்குகள், பழங்கள் என கிடைப்பதை சாப்பிட்டு காட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 4 தசாப்தங்களில் இவர்கள் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்ததாகவும், அப்போதெல்லாம் மனிதர்களை கண்டு பயந்து ஓடி ஒளிந்து மறைந்துள்ளனர்.
தொலைதூர பிரதேசங்களுக்கு சென்று அங்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் நடத்தி வரும் புகைப்படக்கலைஞரான Alvaro Cerezo, 2015ம் ஆண்டு Ho Van Lang-ன் குடும்பத்தினரை பார்த்துள்ளார். காட்டுக்குள்ளே அவர்களை தேடிச் சென்று அவர்களோடு பேசியுள்ளார். இதன் மூலம் மீண்டும் Ho Van Lang-ன் குடும்பத்தை கிராமம் ஒன்றுக்கு அழைத்து வந்து பிறரைப் போன்றதொரு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ளார்.
Ho Van Lang-ற்கு அதுவரை பெண்கள் என்ற இனம் இந்த பூமியில் இருப்பதே தெரியாதாம். ஆனால் தற்போது அவர் பெண்களை பார்த்து அவர்களுடன் வசித்து வருகிறார். இருப்பினும் பெண்களுக்கும், ஆண்களுக்குமான வித்தியாசம், வேறுபாட்டினை அவரால் தற்போதும் இனம் காண முடியவில்லை. மேலும் Lang-ற்கு செக்ஸ் அல்லது இனப்பெருக்கம் என்பது குறித்தும் தெரியாது என்கிறார் Alvaro Cerezo.
லேங், காட்டுக்குள்ளேயே வசித்து வந்தாலும் அவர் மனதால் ஒரு குழந்தையை போன்றவர், யாரையேனும் அடித்துவிடு என்றால் முரட்டுத்தனமாக அடித்துவிடுவார். அவருக்கு சரி, தவறு எதுவும் தெரியாது. கத்தியால் குத்து என்றால் கூட அது உயிரிழப்பை ஏற்படுத்தும் என அறியாதவராக குத்தி விடுவார் என்கிறார் Cerezo.
தற்போது நாகரிக மனித வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ள லேங், தற்போதைய உலகம் மிகவும் சத்தமாக இருப்பதாக தெரிவிக்கிறார். மேலும் மிருகங்கள் மனிதர்களோடு பழகுவதை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது, காட்டுக்குள் மிருகங்கள் என்னை கண்டால் ஓடும் என அவர் கூறியது வித்தியாசமாக இருந்தது.
Lang-ன் தந்தையின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதால் காட்டுக்குள் இருந்து வருவதற்கு சம்மதித்ததாக தெரிவிக்கிறார் Cerezo.
டார்ஜான் என்ற காட்டு மனிதன் பற்றிய படத்தை பார்த்திருப்போம், ஆனால் Ho Van Lang, அதனை மெய்ப்பிக்கும் வகையிலாக ரியல் டார்ஜானாக வாழ்ந்துள்ளது வியப்பை தருகிறது. இந்த ரியல் டார்ஜானுக்கு தற்போது 46 வயது ஆகிறதாம்..