பிரிட்டனில் கொரோனா 3ம் அலை உஷார் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
20 Jun,2021
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்து தடுப்பு மருந்து வினியோகிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுவரும் நிலையில் பிரிட்டனில் இரண்டாவது அலை ஓய்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது அந்நாட்டில் மூன்றாவது அலை துவங்கிவிட்டதாக வைரஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் தற்போது பிரிட்டன் ஆட்டிப்படைத்து வருவதாக எச்சரித்துள்ளனர். இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதால் பிரிட்டன் சுகாதாரத் துறை மிக கவனமாக இதனைக் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஆடம் பின் கூறுகையில் இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் துவங்கிவிட்டதால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். வயோதிகர்களுக்கு அதிக அளவில் தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் செலுத்துவதன்மூலமாக நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களின் நலனை காக்க முடியும். ஆகவே இதற்கு பிரிட்டன் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து செலுத்துவதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை மன தைரியத்துடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் தனக்கு இந்த வைரஸ் பரவல்மீது சிறிதளவு பயம் உள்ளது என்று கூறியுள்ளார். வயோதிகர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படுவதால் 80 சதவீத குடிமக்களை மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதில் இருந்து தவிர்க்க முடியும். முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப் படுவதால் வைரஸ் தாக்கும் அபாயம் 75% குறைகிறது என தற்போது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயத்தில் சரியான கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தினால் வைரஸ் தாக்கும் அபாயம் 90 சதவீதம் குறைகிறது.
ஆகவே இரண்டு டோஸ் தடுப்பு மருந்தையும் பெற்றால்தான் குடிமக்கள் வைரஸ் தாக்கும் அபாயத்திலிருந்து முழுமையாக நீங்கமுடியுமென அவர் உறுதியளித்துள்ளார்.