பேய் பிடித்ததாக கூறி பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ.. போலி சாமியார் கைது
13 Jun,2021
கன்னியாகுமரி மாவட்டம், செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் வீட்டருகே ஒரு கோயில் அமைத்து அருள் வாக்கு சொல்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சங்கிலியில் கட்டி போட்டு பிரம்பால் அடித்து பேய் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் அந்த கோயிலில் இளம் பெண் ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்களுடன் உருண்டு புரளுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தகவல் அறிந்த குளச்சல் டி.எஸ்.பி கணேசன் போலீசாருடன் வெள்ளிக்கிழமை அந்த கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு இளம் பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டு அந்த கோயில் சாமியாரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த பெண் சேவிளை பகுதியை சேர்ந்த வினோ என்ற ராணுவ வீரரின் மனைவி 33-வயதே ஆன அஜிதா என்பதும் பட்டதாரி பெண்ணான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வினோ மற்றும் பெண்ணின் பெற்றோர் இவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என நினைத்தனர்.
அந்த பெண்ணின் கை கால்களை கட்டி போட்ட சாமியார் துரைராஜ், வீட்டில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றதும் அந்த பெண்ணின் குடும்பத்தோடு கோயிலில் தங்க வைத்து அந்த பெண்ணை சங்கிலியில் கட்டிப்போட்டு பேய் ஓட்டுவதாக கூறி தினமும் பிரம்பால் அடித்து வருகிறாராம்.
இதனையடுத்து பெண்ணின் கணவரான ராணுவ வீரர் வினோவை போலீசார் எச்சரித்து படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாமியார் துரைராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாமியார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.