தங்கையை கொல்ல முயன்ற 16 அடி முதலை- காலால் உதை விட்ட அக்கா !
09 Jun,2021
பொதுவாக முதலைகள் ஒரு நபரின் கால்களை அல்லது கைகளை கவ்வினால் உடனே நீருக்குள் இழுத்துச் சென்று சுழல ஆரம்பித்து விடும். இதனால் எந்தப் பெரிய நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும் திணறி இறந்து விடுவார்கள். ஆனால் இங்கே அக்கா கடுமையாக காலால் உதைந்ததால் இந்த முதலை தங்கையை விட்டு விட்டது. பிரிட்டனில் பிறந்த இரட்டை சகோதரிகள் ஜார்ஜி லாரி, மெலிசா. தற்போது 28 வயதாகும் இவர்கள் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு பிரபலமடைந்த சர்ஃபிங் ரிசார்ட் Puerto Escondido பகுதியிலிருந்து, சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் நீரில் நீச்சல் அடித்துள்ளனர்.
அப்போது திடீரென்று பெரிய முதலை ஒன்று மெலிசாவை நீரினுள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவே ஜார்ஜி சிறிது நேரம் மெலிசாவை காணாததால் நீரின் அடிக்கு சென்று தேடியபோது, முதலையின் பிடியில் தன் சகோதரி இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்ற நினைத்த ஜார்ஜியையும் முதலை குதறியது.
இருப்பினும் அவர் கடுமையாக முதலையின் வயிற்றில் உதைந்துள்ளார். இதனால் முதலை அவர்கள் இருவரையும் திடீரென விட்டு விட்டது. அதன் பின்பு மயக்க நிலையில் இருந்த மெலிசாவுடன் கரை சேர்ந்து விட்டார். இருவரின் உடல் முழுக்க முதலை தாக்கிய காயங்கள் இருந்துள்ளது. ரத்தம் வழிய கரை சேர்ந்த சகோதரிகளை அங்குள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜார்ஜி பலத்த காயமடைந்திருந்தாலும், உயிர் தப்பிவிட்டார். எனினும் மெலிசா கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இந்நிலையில் சகோதரிகளின் பெற்றோர், சுற்றுலாவை ஏற்பாடு செய்த பிரபல பிரிட்டன் சுற்றுலா நிறுவனம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.