தங்க நகரம் கண்டுபிடிப்பு
11 Apr,2021
எகிப்து வரலாற்றின் மிகப்பெரிய மர்மம்... வெளிச்சம் போட காத்திருக்கிறது - தங்க நகரம் கண்டுபிடிப்புதங்க நகரம் கண்டுபிடிப்பு
எகிப்தின் வரலாற்றிலே மிக முக்கிய கண்டுபிடிப்பாக துட்டன்காமன் கல்லறை பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இப்போது தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் தொல்லியல் துறையினர் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக இந்த நகரம் மண்ணுக்கு அடியில் எங்கோ புதைத்திருக்கும் என்று எண்ணியிருந்தனர். அந்த நகரம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தை கண்டெடுத்ததன் மூலம் வரலாற்று ஆய்வாளர்களின் பல கேள்விகளுக்கான முடிச்சுகள் இனி மெல்ல அவிழும் என்று நம்பப்படுகிறது.
“பண்டைய எகிப்தியர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு அரிய பார்வையை நமக்கு தருவது மட்டுமல்லாமல் எகிப்து வரலாற்றின் மிகப்பெரிய மர்மம் ஒன்றை வெளிச்சம் போட இது எங்களுக்கு உதவும். ஏன் அக்கேடாதேன்,நெஃபெர்டிட்டியும் அமர்னாவுக்கு செல்ல முடிவு செய்தனர் என்ற மர்மம் விலகும் என பேராசிரியர் பெஸ்டி பிரைன் கூறுகிறார்.
பண்டைய எகிப்தின் புகழ் மிக்க தலைநகரமாக விளங்கியது வாசித் நகர். அக்கேடாதேன் அரசனாக பதவியேற்றதும் கிமு 1346-ல் அமர்னா என்ற புதிய நகரத்தை நிறுவினார். அக்கேடாதேன் மனைவி நெஃபெர்டிட்டி அரசியல் மற்றும் மதங்களில் முக்கியப் பங்கினை கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. அக்கேடாதேன் வாசித் நகர் அதாவது தீபை நகரத்தில் இருந்து தனது தலைநகரத்தை அமர்னாவுக்கு மாற்றினார். இந்த நகரத்தில் எகிப்தின் சூரியக் கடவுளான அதினுக்கு கோயில் எழுப்பினான். ஒற்றை வழிபாட்டை திணிப்பதற்காகவே இந்த கோயில் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்கேடாதேன் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய துட்டன்காமன் மீண்டும் தீபை நகரத்துக்கே தலைநகரை மாற்றினான். இதன் பின்னர் அமர்னா நகரத்தில் இருந்த கட்டடங்கள் பாழடைந்து போனது.
துட்டன்காமன் சிறுவயதிலே அரியணை ஏறிய சிறுவன். துட்டன்காமன் ஆட்சியில் அக்கேடாதேன் தலைநகரம், கலை, மதம் மற்றும் ஆவரது பெயர் கூட வரலாற்றில் இருந்து நிராகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதற்கான விடைகளை தொல்பொருள் அறிஞர்கள் தேடி வருகின்றனர். எகிப்தின் வரலாற்றிலே மிக முக்கிய கண்டுபிடிப்பாக துட்டன்காமன் கல்லறை பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இப்போது தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லக்ஸார் பாலைவனத்தில் பல்வேறு அரசுகள் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டனர். ஹேரெம்ஹேப் மற்றும் சூரியக்கடவுளான ஆதி கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துதான் மேலும் இங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் 3 அடியிலான சிறிய சுவர் ஒன்று தென்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் தங்கநகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணலில் புதைந்திருந்த இந்த நகரத்தில் இருந்து தங்க நகைகள், அரச முத்திரைகள், மட்பாண்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்க நகரம் தொடர்பான அறிவிப்பின் எகிப்தின் சுற்றுலாத்துறைக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. சுற்றுலாத்துறை எகிப்தின் பொருளாதாரத்துக்கு முக்கியப்பங்காற்றுகிறது. அதிகப்படியான் அந்நிய செலவாணியை சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது.