பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னியின் மகனாய் இயேசு பிறந்தார். எனவே இயேசு கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார்.
இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன்முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. ‘அப்பொழுது குழந்தையை முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்’ என்பதே செய்தியாகியது. அதே வேளையில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட வான சாஸ்திரிகள், மேசியா அதாவது, இரட்சகர் பிறந்துள்ளார் என்பதை அறிந்து, ஏரோதுவின் அரச மாளிகைக்கு குழந்தையைக் காணச் சென்றனர்.
இந்தப் பிறப்பின் செய்தி நமக்கு இன்று கூறுவது என்னவென்றால் ஏழை-பணக்காரன், ஆண்டான்-அடிமை, ஆண்-பெண், வெள்ளை-கருப்பு சாதிய வேறுபாடுகள் என்றும், இனம், மொழி என்ற நிலையில் வன்முறைக் கலாசாரங்கள் நிலவி வரும் சூழலில், அனைத்து மக்களும் ஒற்றமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே ஆகும்.
இயேசு கிறிஸ்து அன்பின் குழந்தை. மனு உரு எடுத்த தெய்வ குழந்தை. அக்குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கின்றார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள். இறைவன் நம்மோடு இருக்கின்றார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையொட்டி டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவர்.
நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும். இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள். விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.
கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள். இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.
ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு. பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது, இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.
மொத்தத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது. மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது.