செல்சியைச் சேர்ந்த தம்பதிக்கு £105 மில்லியன் பரிசு
26 Nov,2019
சிச்செஸ்ரர், செல்சியைச் சேர்ந்த ஒரு கட்டிடத் தொழிலாளி மற்றும் அவரது மனைவிக்கு யூரோ மில்லியன்கள் லொட்டறியின் மூலம் £105 மில்லியன் கிடைத்துள்ளது.
ஸ்டீவ் தொம்சன் வயது 42, மற்றும் அவரது மனைவி லென்கா வயது 41 ஆகியோரே 105 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்ஸை வென்றுள்ளனர்.
தேசிய லொட்டறியின் 25 வது ஆண்டு நிறைவு நாளான நொவெம்பர் 19 ஆம் திகதி அன்று அவர்கள் வாங்கிய ரிக்கெற்றுக்கு £105,100,701.90 கிடைத்துள்ளது.
இந்தப் பரிசுத் தொகையை வென்றபோது உடம்பு முழுவதும் நடுங்கியது என்றும் மாரடைப்பு விளிம்பின் எல்லையில் இருப்பது போன்று உணர்ந்ததாகவும் ஸ்டீவ் தொம்சன் தெரிவித்துள்ளார்.
வெற்றிபெற்ற எண்கள் 8, 10, 15, 30 மற்றும் 42, அத்துடன் லக்கி ஸ்டார் எண்களுக்கு 4 மற்றும் 6 இலக்கங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இவ்வளவு பணம் கிடைத்த பின்னர் பெரிய அளவில் பொருட் கொள்வனவில் ஈடுபடவில்லை என்றும் எனினும் ஒரு புதிய ஷேர்ட் வாங்கியதாகவும் தலைமுடி வெட்டியதாகவும் தொம்சன் கூறியுள்ளார்.
மேலும் யூரோ மில்லியன்களை வென்றபோதிலும் தான் உடனடியாக தனது வேலையை விட்டுவிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் தொம்சனின் மனைவி லென்கா கடையொன்றில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையொன்றில் வேலை செய்த தொம்சனின் மனைவி தெரிவிக்கையில்; முழுக் குடும்பத்தினருடன் ஒரு நல்ல கிறிஸ்துமஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
செல்சிப் பகுதியிலேயே தாம் தொடர்ந்தும் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கிடைத்துள்ள பணத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் சமூகத்திற்கான நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்