காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்ற மகள்
30 Oct,2019
கீர்த்திக்கு போன் செய்து ரஞ்சிதா குறித்து கேட்டுள்ளார் ஸ்ரீனிவாஸ். அதற்கு தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், தாய் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் ஹயாத் நகரில் வசித்துவருபவர்கள் ஸ்ரீனிவாஸ் – ரஞ்சிதா தம்பதி. இவர்களுக்கு 19 வயதில் கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறார். லாரி டிரைவரான ஸ்ரீனிவாஸ் கடந்த வாரம் வேலைக்குச் சென்றுள்ளார். ஒருவாரமாக வீடு திரும்பாதவர் 24-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரஞ்சிதா, மகள் கீர்த்தி என யாரும் இல்லை. உடனே கீர்த்திக்கு போன் செய்து ரஞ்சிதா குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், தாய் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதன்பின் கீர்த்தி வீட்டுக்கு வந்தபிறகு இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று, `ரஞ்சிதாவைக் காணவில்லை’ எனப் புகார் கொடுத்துள்ளனர். ரஞ்சிதா உடன் கடைசியாக இருந்தது கீர்த்தி என்ற அடிப்படையில் முதலில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், “என் அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் ஒரு குடிகாரர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவை அடித்துத் துன்புறுத்துவார். நான் கல்லூரிக்குச் சென்றிருந்த சமயத்தில் அப்பா, அம்மாவைக் கொலை செய்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். இவரின் வாக்குமூலத்தின்படி ஸ்ரீனிவாஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆனால், “நான் வேலைக்குச் சென்று ஒருவாரம் ஆகிவிட்டது. இன்றுதான் வீடு திரும்பினேன்” என ஸ்ரீனிவாஸ் கூற புகாரை பெற்றுக்கொண்டு இருவரையும் அனுப்பியுள்ளனர். வீட்டுக்குச் சென்ற பிறகு கீர்த்தியின் விசாகப்பட்டினம் பயணம் குறித்து ஸ்ரீனிவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கீர்த்தி மழுப்பலாக பதில்சொல்லவே அவர்மீது ஸ்ரீனிவாஸுக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் கீர்த்தியின் நண்பர் பால் ரெட்டி என்பவரின் தந்தை ஸ்ரீனிவாஸைச் சந்தித்துள்ளார். அவர் ஸ்ரீனிவாஸிடம், `கீர்த்தி 22-ம் தேதியிலிருந்து எங்கள் வீட்டில்தான் இருந்தார்’ எனக் கூற கீர்த்தி மீது, ஸ்ரீனிவாஸுக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.
உடனடியாக இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில் ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் ரஞ்சிதாவின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் நடந்த உண்மைகளை விவரித்திருக்கிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கல்லூரி மாணவியான கீர்த்தி தன்னுடைய பக்கத்து வீட்டில் உள்ள சசி என்பவருடன் பழகிவந்துள்ளார். கல்லூரி முடிந்தபிறகு சசியுடன் வெளியே செல்வதும் வீட்டுக்கு லேட்டாக வருவதுமாக இருந்துள்ளார். இருவரது பழக்கம் குறித்து ரஞ்சிதா கண்டித்துள்ளார். `இனிமேல் சசியுடன் பழகக்கூடாது, மீறினால் தந்தையிடம் சொல்லிவிடுவேன்’ என எச்சரித்துள்ளார். தாயின் இந்த எச்சரிக்கையை அடுத்து அவரைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, 19-ம் தேதி தந்தை ஸ்ரீனிவாஸ் வீட்டில் இல்லை என்பதால் சசியை வீட்டுக்கு அழைத்த கீர்த்தி அவரின் உதவியுடன் ரஞ்சிதாவைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளார். பின்பு இறந்த ரஞ்சிதாவின் உடலை அகற்றாமல் இருவரும் அதே வீட்டிலேயே தங்கியுள்ளனர். 22-ம் தேதி இறந்த உடலிலிருந்து துர்நாற்றம் வீசவே அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். போலீஸிடம் சிக்கக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்துகொண்டது போல் காண்பிப்பதற்காக ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் உடலை வீசியுள்ளனர்.
தந்தைக்குக் கொலை குறித்து தெரியக்கூடாது என்பதற்காக தன் நண்பர் பால் ரெட்டியிடம், “தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் இருக்கிறார். தனியாக இருக்கமுடியாது” எனக் கூறி அவர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.
ஆனால், தந்தையிடம் விசாகப்பட்டினத்தில் இருக்கிறேன் எனப் பொய் சொல்லியுள்ளார். பால் ரெட்டியின் தந்தை, கீர்த்தி தன் வீட்டில் தங்கியிருந்தது குறித்து சொல்லவே வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த நாள்களில் கீர்த்தியின் போன் இருந்த லொகேஷனை சோதனை செய்தோம். அதில் அவர் இருந்தது ஹயாத் நகரில் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம். கீர்த்தியும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் விரிவான விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளோம்” எனக் கூறியுள்ளனர்.