ஐரோப்பிய பொருட்களுக்கான வரி விதிப்பை உறுதிப்படுத்தியது அமெரிக்கா
19 Oct,2019
ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 7.5 பில்லியன் டொலர் வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இணக்கம் ஏற்படாதமையினால் இன்று முதல் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா மேலதிக வரியை அறவிடவுள்ளதாக அறிவித்தது.
இதன்படி வொஷிங்டன் ஆண்டுதோறும் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள 160 ஐரோப்பியப் பொருட்களுக்கு மேலதிக வரியை விதிக்கிறது.
இந்த நடவடிக்கைகளில் விவசாயப் பொருட்களுக்கு 25 சதவீதம் அதிகரிப்பு மற்றும் விமானங்கள் தொடர்பாக 10 சதவீத அதிகரிப்பும் அடங்குகின்றன. மேலும் ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் அதிக வரி விதிப்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.
விமானம் தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்குவதில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நீண்ட காலமாக முரண்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற கட்டணங்களுடன் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.