என்னை யாரும் காப்பாத்தாதீங்க’- சிங்கத்தின் முன் அமர்ந்த இளைஞர்
18 Oct,2019
டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரியில் பூங்காவில் விலங்குகளைப் பார்வையிட வரும் மக்களில் சிலர், பாதுகாப்பு வேலியைத் தாண்டி விலங்குகளிடம் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றமாகும். உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். த்ரிலுக்காக ஆபத்தான விலங்குகள் இருக்கும் பகுதிக்குச் சென்று, புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுக்கின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர், உயிரியல் பூங்காவுக்கு சென்றவர் சிங்கம் இருந்த பகுதிக்கு சென்றார். ‘ஐ லவ் யூ பேபி’ என்று கூறியவாறு சிங்கத்தின் முன் நடனமாடினார். முதலில் அந்தப் பெண்ணை பூங்கா ஊழியர் என நினைத்தவர்கள், பின்னர் தான் அவர் பார்வையாளர் எனத் தெரிந்து பூங்கா நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், சிங்கம் இருந்த பகுதிக்குள் இளைஞர் ஒருவர் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைப் பார்வையாளர்கள் சுற்றிப்பார்த்துள்ளனர்.
அப்போது இளைஞர் ஒருவர், சிங்கம் முன்பு அமர்ந்து அதைத் தொந்தரவு செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் அந்த நபரை சிங்கத்திடமிருந்து மீட்டனர். நல்ல வேளையாக, சிங்கம் அந்த நபரைத் தாக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் வந்து அந்த நபரை அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்துப் பேசிய பூங்கா ஊழியர்கள், சிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் இருப்பதாகப் பார்வையாளர்கள் கூறினர். பெரிய சுவர் மற்றும் அகழியைத் தாண்டி அந்த நபர் அங்கு சென்றுள்ளார். நாங்கள் அங்கு சென்றதும், பெரிய ஏணி ஒன்றை வைத்து மேலே வரும்படி கூறினோம். அந்த இளைஞரோ நாங்கள் சொல்வதைக் கேட்பதாக இல்லை. ‘நான் சாக வந்திருக்கிறேன். என்னை யாரும் காப்பாற்றாதீர்கள்’ என்றார். அவர் சிங்கத்தைத் தொந்தரவு செய்தார். இருந்தும், சிங்கம் அவரை ஒன்றும் செய்யாதது ஆச்சர்யமாக இருந்தது” என்றனர்.
காவல்துறையினரின் விசாரணையில், அந்த நபர் பீகாரைச் சேர்ந்த ரெஹான் கான் என்பது தெரியவந்தது. அவர், தற்போது மேற்கு டெல்லியில் வசித்துவருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என உறவினர்கள் கூறியுள்ளனர். சிங்கத்திடம் பேசுவதற்காகச் சென்றேன் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்