5 மாத குழந்தையுடன் வீட்டில் இருந்த தம்பதி கொடூர கொலை!
16 Oct,2019
நாமக்கல்லில் வீடு புகுந்து இளம் தம்பதியை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பழ வியாபாரம் செய்து வந்த விமல் ராஜ் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீசாணத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ள நிலையில் அனிதாவின் தாய், தந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் விமல்ராஜ், அனிதா மற்றும் அவரது தந்தை கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அனிதாவின் தாய் கலாவதி, மகள் மற்றும் மருமகன் உயிரிழந்து கிடப்பதையும் அருகில் 5 மாத குழந்தை அழுது கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர் கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு, இரட்டை கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இளம் தம்பதியின் உடலைக் உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண் என்பவருக்கும் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இளம் தம்பதி கொலை வழக்கில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.