கணவன் – மனைவி கொன்று புதைப்பு..!
14 Oct,2019
திருப்பூரில் வசிக்கும் சகோதரிக்கு மதுரையில் இருந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கச்சென்ற பைனான்சியரும் அவரது மனைவியும் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகோதரி வீட்டின் பின்புறம் ஒரே குழியில் புதைக்கப்பட்ட இருவரது சடங்களையும் காவல்துறையினர் தோண்டி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அடுத்த சூளபுரம் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தாமணி. இவர்களுக்கு பாஸ்கர் என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சரண்யாவுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் பாஸ்கருக்கு நவம்பர் 1ந்தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதனால் செல்வராஜ் தனது சொந்தங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 ந்தேதி திருப்பூர் அடுத்த வெள்ளகோவில் உத்தண்ட குமார வலசு கிராமத்தில் வசித்து வரும் தனது மூத்த சகோதரி கண்ணம்மாளுக்கு திருமண அழைப்பிதல் கொடுக்க மனைவி வசந்தாமணியுடன் காரில் அவர் புறப்பட்டார்.
அதன் பின்னர் தம்பதியர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் புறப்பட்டுச்சென்ற இண்டிகா கார் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சாலை பிரிவு சர்வீஸ் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை கேட்பார் இன்றி நின்றது.
ரோந்து சென்ற தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், இது பற்றி தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
காரை திறந்து சோதனை செய்த போது, அதில் பைகளில் திருமண பத்திரிகைகள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. மேலும், ஓட்டுநர் இருக்கை மற்றும் காரின் உள் பகுதி, வெளிப்பகுதி முழுவதும் மிளகாய் பொடி சிதறி கிடப்பதை பார்த்த போலீசார் காரை தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
திருமண பத்திரிக்கையை கொண்டு அது மாயமான பைனான்சியர் பயணித்த கார் என்பதை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செல்வராஜின் மருமகன் கவுசிக் என்பவர் தனது மாமனார் மற்றும் மாமியார் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் புறப்படுவதற்கு முன்னதாக செல்வராஜின் உறவினர்கள் செல்வராஜின் சகோதரி கண்ணம்மா வீட்டிற்கு சனிக்கிழமை சென்று பார்த்த போது கண்ணம்மாள் மாயமாகி இருந்தார்.
வீட்டின் பின்புறத்தில் புதிதாக குழி ஒன்று வெட்டப்பட்டு இருந்தது. அதில் பாதி அளவு மண் போட்டு அதன் மேல் துணி போட்டு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதில் இருந்து துர் நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த துணியை எடுத்து பார்த்த போது கணவன் மனைவி இருவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் குழிக்குள் சடலமாக பாதி அளவு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரவு நேரம் ஆகிவிட்டதால் இரு உடல்களையும் எடுக்க இயலாது என்று அப்படியே துணி போட்டு மூடிவைத்தனர். அங்கு காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் கணவர் இறந்து விட்டதால் அந்த ஓட்டு வீட்டில் கண்ணாம்மா மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கண்ணம்மாவை பிடித்து விசாரித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை இருவரது சடலங்களையும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் கண்ணம்மா வீட்டில் பார்க்க கூடாத காட்சியை பார்த்து விட்டதால் இந்த கொலை நடந்ததா ? அல்லது கணவனை இழந்து தனியாக வசிக்கும் தன்னை பைனான்சியரான அண்ணன் கவனிக்கவில்லை என்ற முன்பகையால் இந்த சம்பவம் நடந்ததா ? என்ற இருவேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் கண்ணம்மாவுக்கு துணையாக இருந்து இந்த கொலைகளை செய்தது மர்ம ஆசாமி யார் ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடன் பிறந்த சகோதரி வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் அண்ணனும் அண்ணியும் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இந்த சம்பவம் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது