ஐரோப்பாவில் பெரும் போதைப்பொருள் வேட்டை : நூற்றுக்கணக்கானோர் கைது
14 Oct,2019
ஐரோப்பிய கண்டம் தழுவிய ரீதியில் பெருமெடுப்பில் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் 85 மில்லியன் யூரோ பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்த 37 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் போது போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘இணைந்த நடவடிக்கை நாட்கள் 2019’ என்ற பெயரின் கீழ் இடம்பெற்ற இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது வெறுமனே போதைப்பொருள் கடத்தல் மட்டுமல்லாது, மனிதக் கடத்தல், சட்டவிரோத குடியேறிகள் இடமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 411 பேரில் 54 பேர் மனிதக்கடத்தல் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் என யூரோபோல் (EUROPOL) தெரிவித்துள்ளது.